மக்களவைத் தேர்தலையடுத்து, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தவிர மீதமுள்ள 6,7,8,9, 11 ஆகிய வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும்.
பிளஸ் 2 தேர்வு மார்ச் 25-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து, அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 3 முதல் 16-ஆம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், ஏப்ரல் 22-ஆம் தேதிக்குப் பிறகு இந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, ஏப்ரல் கடைசியில்தான் பள்ளித் தேர்வுகள் நிறைவுபெறும்.தேர்தல் வாக்குப்பதிவையடுத்து இந்த ஆண்டு சில தினங்கள் முன்கூட்டியே தேர்வுகள் முடிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேர்வுகள் தொடர்பாக திங்கள்கிழமை முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக