எப்படி யோசித்தாலும் இப்படியொரு நிகழ்வு நினைவில் இல்லை; பணியிலிருக்கும் ஒரு அதிகாரியை அரசியலுக்கு அழைக்க மக்கள் கூட்டம் திரண்டதும் அதைத் தடுக்க அரசு இயந்திரம் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க முயன்றதும்!

சமூக வலைதளங்களில் வசிப்பவர்களுக்கு ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை முதல்வர் பதவிக்கு முன்னி றுத்தி நடந்துகொண்டிருக்கும் கோஷங்களும் பிரச் சாரங்களும் புதிதாக இருக்காது. பல்லாயிரக்கணக் கானோர் இந்த முழக்கங்களுடன் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றனர். இணையத்தில் இருந்தவர்கள் இப்படி ஒரு கோரிக்கையோடு வீதியில் இறங்குவது தமிழகத்தில் அநேகமாக இதுவே முதல் முறை.

நேரடித் தேர்தல் அரசியலில் சகாயத்துக்கு எந்த அளவுக்கு ஆர்வம் இருக்கிறது; அவருக்கு அப்படியான கனவுகள், திட்டங்கள் ஏதும் இருக்கின்றனவா என்பது நமக்குத் தெரியாது. ஆனால், 'அரசியலில் சகாயம்' எனும் வார்த்தைகளே அரசியல்வாதிகள், கட்சி அரசியல் எழுத்தாளர்கள் மத்தியில் அமிலத்தைப் போன்ற எரிச்சலை உருவாக்குவதை உணர முடிகிறது.

அதற்குள்ளேயே சிலர் கேட்கிறார்கள், "நேர்மையாக இருந்தால் மட்டும் போதுமா? சமூக நீதி தொடர்பாக சகாயத்தின் கருத்து என்ன, சமய நல்லிணக்கத்தைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார், தனியார்மயம் குறித்த அவருடைய கருத்து யாது?"

அது சரி, தமிழ்நாட்டில் இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் எத்தனை பேருக்கு இதுபற்றியெல்லாம் என்ன கருத்து இருக்கிறது என்று நமக்குத் தெரியும்? மேலும், இதுவரை இதுபற்றியெல்லாம் பேசாததாலேயே ஒருவருக்கு எதுவுமே தெரியாது என்று முடிவெடுக்க நாம் யார்? எல்லாவற்றுக்கும் மேல் அரசியல் அரங்கில் புதிதாக ஒருவர் பெயர் உச்சரிக்கப்பட்டால் ஏன் இவ்வளவு பதற்றம்?

உமாசங்கர் ஞாபகங்கள்

என்னுடைய பள்ளி நாட்களில் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக உமாசங்கர் ஐஏஎஸ் பணியாற்றிய நாட்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. இளமைத் துடிப்போடு பணிக்கு வந்திருந்த உமாசங்கர் கலக்கிக்கொண்டிருந்தார். புது சினிமா வந்தால் டிக்கெட்டைப் பல மடங்கு உயர்த்தி விற்பது அங்குள்ள திரையரங்குகளின் வழக்கம் (மன்னார்குடி திரையரங்குகளில் அப்போது முதல் வகுப்புக் கட்டணம் ரூ.10 என்று நினைவு). ஒருநாள் இரவுக் காட்சியின்போது ஒரு திரையரங்கில் உள்ளூர் விவசாயிபோல, லுங்கி-முண்டாசோடு உள்ளே புகுந்தார் உமாசங்கர். ரூ.10 டிக்கெட்டை ரூ.100-க்கு விற்ற திரையரங்க சிப்பந்தியை கவுன்ட்டரிலேயே வைத்து கையும் டிக்கெட்டுமாகப் பிடித்தார். இன்னொரு நாள் இப்படித்தான். பெட்ரோல் நிலையங்களுக்கு மாறுவேஷத்தில் போன அவர், அளவு குறைவாக பெட்ரோல் நிரப்பியவர்களைக் கையும் பெட்ரோல் போத்தலுமாகப் பிடித்தார். இப்படி ஆற்றில் அத்துமீறி மணல் அள்ளியவர்களைப் பிடித்துவிட்டார், ரேஷன் அரிசி கடத்தியவர்களைப் பிடித்துவிட்டார் என்று ஏதாவது சேதிகள் வந்துகொண்டே இருக்கும். மக்கள் சதா பேசிக்கொண்டே இருப்பார்கள்.

தமிழ்நாட்டிலேயே முன்னோடியாக திருவாரூர் மாவட்டத்தை மின் ஆளுகை மாவட்டமாகக் கொண்டு வந்தவர் உமாசங்கர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் நிறையப் பேச வருவார். எவரும் அவரை எளிதில் சந்திக்க முடியும். எங்களூர் பக்கம் பள்ளி மாணவ-மாணவியர் பலர் வெகுநாட்களுக்கு, "உமா சங்கர்போல நானும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாவேன்" என்று சொல்வதை சக மாணவனாகப் பார்த்திருக்கிறேன்.

தன்னுடைய பணிநாட்களில் சுழன்றடிக்க அனுமதிக்கப்பட்ட காலத்தைவிடவும் காற்றில்லா பிரதேசத்தில் தனித்துவிடப்பட்ட காலமே உமாசங்கருக்கு அதிகம். திமுக, அதிமுக இரு ஆட்சிக் காலங்களிலும் அவர் கொடூரமாகப் பந்தாடப்பட்டார்; பல சமயங்களில் அவருடைய நேர்மையான, துணிச்சலான செயல்பாடே அவருக்கு எதிரியாக அமைந்தது என்று அதிகார வட்டாரங்களில் பேசிக்கொண்டார்கள். இன்றைக்கு ஒரு மதகுருபோல, "பாவத்தின் சம்பளம் மரணம்; கடவுளின் வருகை சமீபத்துவிட்டது" என்று பிரசங்கம் செய்துகொண்டிருக்கும் உமாசங்கரைக் கிண்டலடிக்கும் தலைமுறையினர் பலருக்கு, அந்த நாள் உமாசங்கரைத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. ஒரு உமாசங்கரின் மனஅழுத்தத்துக்குப் பின்னிருக்கும் இந்த அரசியல் சமூகத்தின் குற்றங்கள் மிகக் குரூரமானவை; ரகசியமானவை. பல நேரங்களில் நான் எனக்குள் கேள்வி எழுப்பிக்கொள்வது உண்டு: உமாசங்கர் நிலைமையில் நான் இருந்தால் என்னவாகியிருப்பேன்? பைத்தியம் பிடித்துத் தெருத் தெருவாகத் திரிந்துகொண்டிருக்கலாம். அவர் அந்தப் பரிதாபத்துக்கு ஆளாக நேராமல், அவர் நம்பும் - நாம் கிண்டலடிக்கும் கடவுள்தான் காப்பாற்றியிருக்க வேண்டும்!

அற வறட்சி

இந்த வெள்ளத்திலும் இடையறாது ஓடிக்கொண்டிருந்த வர்களில் ஒருவரான அரசு பஸ் ஓட்டுநர் ஜெயராமனைச் சமீபத்தில் பேட்டியெடுத்தேன். "நீங்கள் எப்படி இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தீர்கள்?" என்றபோது ஜெயராமன் சொன்னார். "சின்ன வயசுல எங்க ஊர்ல பஸ் ஓட்டுன ஒரு அண்ணனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரு ரொம்ப நல்லவரு. யாராவது உடம்புக்கு முடியலைன்னு சொன்னா, அவங்க நிறுத்தச் சொல்ற எடத்துல வண்டியை நிறுத்துவாரு. பாதி வழியில பெரியவங்க கை நீட்டினாலும் வண்டியை நிறுத்தி ஏத்திக்குவாரு. பஸ்ல நாங்க பள்ளிக்கூட பசங்க நின்னுக்கிட்டு வந்தோம்னா, கூப்பிட்டு அவருக்குப் பின்னாடி உக்காரச் சொல்லுவாரு. அந்த அண்ணனப் பாக்கும்போதெல்லாம் நம்மளும் இப்படி வண்டி ஓட்டணும்னு தோணிக்கிட்டே இருக்கும்; அப்படியே ஓடியாந்துட்டேன்."

நாமெல்லாம் அப்படித்தானே வளர்ந்தோம்! ஒரு நல்ல ஆசிரியரைப் பார்த்து நாமும் ஆசிரியராக வேண்டும் என்று நினைப்பது, ஒரு நல்ல மருத்துவரைப் பார்த்து நாமும் நல்ல மருத்துவராக வேண்டும் என்று நினைப்பது, ஒரு நல்ல காவல் அதிகாரியைப் பார்த்து நாமும் காவல் அதிகாரியாக வேண்டும் என்று நினைப்பது! பல தலைமுறைகள் அப்படித்தானே உருவாயின? இன்றைய பிள்ளைகள் எடுத்த எடுப்பில் கண்ணுக்குத் தெரியாத லட்ச ரூபாய் வேலைகளைப் பற்றிப் பேசுகிறார்கள் என்றால், அதற்கான காரணங்களில் ஒன்று, நேர்மையான முன்னுதாரணங்களையும் விழுமியங்களைச் சுமந்த மனிதர்களையும் நாம் அழித்தொழித்ததும்கூட!

லோகநாதன் ஞாபகங்கள்

மொழிபெயர்ப்பாளரும் பேராசிரியருமான ஏ.வி.தனுஷ்கோடியின் தந்தை ஏ.வி.லோகநாதன். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்தவர். "அப்பா சொத்துன்னு எதுவும் எங்களுக்கு மிஞ்சலை. ரொம்ப சாதாரணப் பின்னணியிலதான் வாழ்ந்தோம். ஆனா, காமராஜரே அப்பாவை உயர்வா பேசுவார். ஒருமுறை காமராஜருக்கு மிக நெருக்கமான ஒருத்தர், தன் நெருக்கத்தைச் சொல்லி ஒரு காரியத்துக்காக அப்பாகிட்ட வந்திருக்கார். 'விதிகளுக்குப் புறம்பா எதுவும் செய்ய மாட்டேன். நீங்கள் முதல்வர்கிட்டேயே வேணும்னாலும் சொல்லிக்குங்க' என்று வழக்கம்போலச் சொல்லி அனுப்பியிருக்கார் அப்பா. விஷயம் காமராஜர் காதுக்குப் போயிருக்கு. 'நான் நேர்மையானவன்னு சொல்லித்தானே என்னை இங்கெ உக்கார வெச்சிருக்கீங்க? எனக்குக் கீழ இருக்கவங்களையும் அப்படி நேர்மையானங்களாக இருக்க விட்டாத்தானே நிர்வாகம் நேர்மையா நடக்கும்? எனக்கு நெருக்கமானவங்களே அதைக் கெடுக்கலாமா? கலெக்டரு அப்படித்தான் இருப்பாரு. நீங்க செஞ்சதுதான் தப்பு!'ன்னு சொல்லி அந்த நண்பரைத் திருப்பி அனுப்பிச்சுட்டாராம் காமராஜர். நேர்மை தவறி எத்தனை வீடு வாங்கி வெச்சிட்டுப்போயிருந்தாலும், இந்தப் பெருமையை எங்களுக்கு எங்கப்பாவால கொடுத்திருக்க முடியாது" என்று அடிக்கடி சொல்வார் தனுஷ்கோடி.

ஏன் கூப்பிடுகிறார்கள்?

அன்றைக்கெல்லாம் யாரும் லோகநாதனை அரசியலுக்கு வா என்று கூப்பிட்டிருக்க மாட்டார்கள். களத்தில் காமராஜர்களும் கக்கன்களும் இருக்கும்போது ஐஏஎஸ் அதிகாரிகளை அரசியலுக்குக் கூப்பிட மக்களுக்கு என்ன கிறுக்கா பிடித்திருக்கிறது! இப்போது வீதிக்கு வந்து சகாயத்தைக் கூப்பிடுகிறார்கள் என்றால், என்ன அர்த்தம்? இன்றைய அரசியல் களத்தில் நிற்கும் உங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்; உங்களுடைய நம்பிக்கைத் துரோகங்களால் அவர்கள் வெறுத்துப்போயிருக்கிறார்கள் என்று அர்த்தம். அரசியலில் சூனியம் நிலைகொண்டிருக்கிறது என்று அர்த்தம்!

சகாயத்தின் மீதான கவர்ச்சி அல்ல; ஒரு புதிய அரசியல் மாற்றத்துக்கான பசியே தமிழக மக்களை இப்போது வாட்டியெடுக்கிறது. முடிந்தால் அந்தப் பசியைப் போக்க மக்களுக்கு ஏற்ற செயல்திட்டங்களோடும் நல்ல தலைமையோடும் மக்களைச் சந்தியுங்கள்; இல்லையேல் வாயை மூடிக்கொள்ளுங்கள்!

- சமஸ்,