சனி, 22 ஆகஸ்ட், 2015

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது.செப்டம்பர் 1-ந் தேதி உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும்.


சென்னை, 

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 24-ந் தேதி (நாளை மறுநாள்) காலை 10 மணிக்கு தொடங்கும் என்று கடந்த வாரம் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்து இருந்தார்.

அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்

இந்த நிலையில், சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக, சபாநாயகர் ப.தனபால் தலைமையில் நேற்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. 

சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில், அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, தி.மு.க. கொறடா சக்கரபாணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் பீம்ராவ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் ஆறுமுகம், புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட எதிர்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 

கூட்டம் நிறைவடைந்த நிலையில், சபாநாயகர் ப.தனபால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இரங்கல் தீர்மானம்

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினம், மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம், முன்னாள் அமைச்சர் பூ.செந்தூர் பாண்டியன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கூட்டம் ஒத்திவைக்கப்படும். 

மானிய கோரிக்கைகள்

25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்குகிறது. அன்றைய தினம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, வேளாண்மை துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும். 

26-ந் தேதி (புதன்கிழமை) தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும். 

27-ந் தேதி (வியாழக்கிழமை) பொதுப்பணித்துறை மீதான விவாதம் நடக்கும். 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஓணம் பண்டிகை என்பதால் அன்றைய தினம் அரசு விடுமுறை ஆகும். அதேபோல், 29-ந் தேதி (சனிக்கிழமை), 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் அரசு விடுமுறை ஆகும். 

31-ந் தேதி (திங்கட்கிழமை) சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை ஆகியவற்றின் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும். செப்டம்பர் 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும். 

5 நாட்கள் கூட்டம் இல்லை

செப்டம்பர் 2-ந் தேதி (புதன்கிழமை) நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங் கள் துறை, சுற்றுலா-கலை மற்றும் பண்பாடுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும். செப்டம்பர் 3-ந் தேதி (வியாழக்கிழமை) கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது. 

செப்டம்பர் 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொழில் துறை, இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள்-நிர்வாகம், போக்குவரத்துத்துறை மீதான மானியகோரிக்கை விவாதம் நடைபெறும்.

செப்டம்பர் 5, 6 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) தேதிகள் அரசு விடுமுறை நாளாகும். செப்டம்பர் 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 5 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் இல்லை. செப்டம்பர் 12, 13 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) அரசு விடுமுறை நாளாகும். 

விநாயகர் சதுர்த்தி விடுமுறை

செப்டம்பர் 14-ந் தேதி (திங்கட்கிழமை) வருவாய் துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும். 

செப்டம்பர் 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கால்நடை பராமரிப்பு, மீன் வளம், பால் வளத்துறை மீதான மானியகோரிக்கை விவாதமும், செப்டம்பர் 16-ந் தேதி (புதன்கிழமை) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானியகோரிக்கை விவாதமும் நடைபெறும். 

செப்டம்பர் 17-ந் தேதி (வியாழக்கிழமை) விநாயகர் சதுர்த்தி என்பதால் அரசு விடுமுறை ஆகும்.

செப்டம்பர் 18-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங் கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மீதான மானியகோரிக்கை விவாதம் நடைபெறும்.

செப்டம்பர் 19-ந் தேதி (சனிக்கிழமை) பேரவைக்கூட்டம் இல்லை. செப்டம்பர் 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அரசு விடுமுறைநாளாகும். 

காவல் மற்றும்தீயணைப்பு துறை

செப்டம்பர் 21-ந் தேதி (திங்கட்கிழமை) வணிகவரி, முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப் பதிவு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மீதான மானியகோரிக்கை விவாதமும், செப்டம்பர் 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காவல் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதமும் நடைபெறும். 

செப்டம்பர் 23-ந் தேதி (புதன்கிழமை) நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள், சட்டத்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும். 

செப்டம்பர் 24-ந் தேதி (வியாழக்கிழமை) பக்ரீத் பண்டிகை அரசு விடுமுறை ஆகும்.

செப்டம்பர் 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) எரிசக்தித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மீதான மானியகோரிக்கை விவாதம் நடைபெறும்.

செப்டம்பர் 26 (சனிக்கிழமை), 27 (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாளாகும். 

சட்டமுன்வடிவு 

செப்டம்பர் 28-ந் தேதி (திங்கட்கிழமை) இந்து சமய அறநிலையத்துறை, வனம், சுற்றுச்சூழல் துறை மீதான மானியகோரிக்கை விவாதம் நடைபெறும். செப்டம்பர் 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பொதுத்துறை, மாநிலச் சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும். மேலும், அன்றைய தினம் அரசினர் சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். ஏனைய அரசினர் அலுவல்கள் நடைபெறும். 

இவ்வாறு சபாநாயகர் ப.தனபால் கூறினார். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக