திங்கள், 28 ஜூலை, 2014

ஆசிரியர்கள் நியமன எண்ணிக்கையை ஏற்றி யும், இறக்கியும், அ.தி.மு.க., அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர் -தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

.
ஆசிரியர்கள் நியமன எண்ணிக்கையை ஏற்றி யும், இறக்கியும், அ.தி.மு.க., அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்,' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பான, அவரது அறிக்கை:முதலில், கல்வி துறை அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம், '55 ஆயிரம் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படுவர்' எனக்கூறி, மிகப் பெரிய எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தினார்.ஒரு வாரம், அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, '55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்' என, திடீரென ஒரு போடு போட்டார்.

ஆசிரியர்கள் எண்ணிக்கை பற்றி, அவரிடம் விளக்கம் கேட்பதற்கு முன், அமைச்சரவையிலிருந்து கழற்றி விடப்பட்டார்.அவரைத் தொடர்ந்து, சிவபதி, முன்னர் செய்யப்பட்ட அறிவிப்புகளை ஆராய்ந்து பார்க்காமல், '26 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்கப் போகிறோம்' என்றார். சில நாட்களுக்கு பின், விழிப்புணர்வு பெற்றவரை போல, அவர், '14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்' என்றார்.

சிவபதியை தொடர்ந்து நான்காவது அமைச்சராக வைகைச் செல்வனும், ஐந்தாவது அமைச்சராக பழனியப்பனும் பொறுப்பில் இருந்த போது, 'நமக்கேன் வம்பு' என, ஆசிரியர் நியமனம் பற்றி எதுவும் கூறவில்லை.ஆனால், அப்போது ஊரகத் தொழில் அமைச்சராக இருந்த கே.பி.முனுசாமி, '64 ஆயிரம் ஆசிரியர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களை நியமித்துள்ளோம்' என்றார்.
இன்று அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. இன்றைய கல்வி அமைச்சர் வீரமணி, ஒரு விழாவில் பேசும் போது, 'கடந்த மூன்றாண்டுகளில், 51 ஆயிரம் ஆசிரியர்கள் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில், 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்' என, அறிவித்தார்.

ஆனால், இதே அமைச்சர் கல்வி மானியக் கோரிக்கையின் விவாதத்தின் போது, '3,459 ஆசிரியர்கள் மற்றும், 415 ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் நியமிக்கப்படுவர்' என, தெரிவித்திருக்கிறார். எப்படி தான் ஆசிரியர்கள் நியமனம் குறித்து எண்ணிக்கையை ஏற்றியும், இறக்கியும் அ.தி.மு.க., அமைச்சர்களால் கூற முடிகிறதோ.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

Source DINAMALAR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக