வியாழன், 24 ஏப்ரல், 2014

தங்குவதற்கு இடம் ஒதுக்காததால் ஆவேச முற்றுகை : "ரிஸர்வ் டூட்டி' ஓட்டுச்சாவடி அலுவலர் அவதி

நாமக்கல் மற்றும் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில், தேர்தல் பணியாற்ற
நியமிக்கப்பட்ட ரிஸர்வ் டூட்டி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, அடிப்படை வசதிகள்
செய்து தரப்படாததால், அவர்கள் நேற்றிரவு, நாமக்கல் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார்
அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நாமக்கல் லோக்சபா தொகுதி தேர்தலுக்காக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 1,457
ஓட்டுச்சாவடிகளுக்கு, ஓட்டுச்சாவடி தேர்தல் அலுவலர், ஓட்டுப்பதிவு அலுவலர் ஆகியோருக்கு பணி ஒதுக்கப்பட்டு, நேற்று ஓட்டுப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரத்துடன்,சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடிக்கு, மண்டல அலுவலர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.அதில், ஒவ்வொரு சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடிக்கும், தேவையான அலுவலர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு மாற்றாக, ஏதாவது பிரச்னை என்றால், பதிலி அலுவலர்களாக (ரிசர்வ் டூட்டி), தலா ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், 150லிருந்து, 200 அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள், அந்தந்த சட்டசபை தொகுதி தலைமையிடத்திற்கு, நேற்று காலை, 7 மணிக்கு வரவழைக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை.

இந்நிலையில், நாமக்கல் சட்டசபை தொகுதிக்கு, ரிஸர்வ் டூட்டி பணியாளர்கள், நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்தனர். அதேபோல், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி ரிஸர்வ் டூட்டி பணியாளர்கள், நாமக்கல் தாலுகா அலுவலக வளாகத்திலும் தங்க வைக்கப்பட்டனர். காலை முதல் மாலை வரை, பெண்கள் உட்பட அலுவலர்களுக்கு தங்குவதற்கு இடவசதி, கழிப்பிட வசதி செய்து கொடுக்காததால், ஆவேசமடைந்த
அலுவலர்கள், கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இரவு, 8 மணி வரை, எவ்வித வசதியும் செய்து தரப்படாததால், பெண் பணியாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் காளிமுத்து கூறியதாவது: பெண் அலுவலர்களை, கோட்டாட்சியர் அலுவலகத்திலும், ஆண் பணியாளர்களை, தனியார் மண்டபத்தில் தங்க
வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் தங்களுடைய வீட்டிற்கு சென்றுவிட்டு, நாளை(இன்று) காலை, வருவதாக தெரிவிக்கின்றனர். தேர்தல் பணிக்கு வந்தவர்கள், கமிஷன்உத்தரவுபடி நடந்து கொண்டு தான் ஆக வேண்டும். அதற்காக சில ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தேவையில்லாமல், சில அலுவலர்களின் தூண்டுதலின் பேரில், கோஷமிட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக