சனி, 19 ஏப்ரல், 2014

ஊழியர்களின் ஊமைக்கண்ணீர்

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் செய்யக்கூடியஅனைத்துவிதமான முறைகேடுகளையும் கட்டுக்குள் கொண்டுவர தேர்தல்ஆணையம் எடுக்கும் முன் முயற்சிகள் பொதுமக்களின் வரவேற்பையும்அரசியல்வாதிகளின் எதிர்ப்பையும் ஒருசேரப் பெற்று வருவதை பார்க்கிறோம்.
அதே நேரம், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் வரும்அரசு ஊழியர்கள் பலவிதங்களிலும் நெருக்கடிகளுக்கும், மனஉளைச்சலுக்கும் ஆளாவதாகவும் செய்திகள் வருகின்றன. முன்பெல்லாம் தேர்தல் பணியென்பது, வாக்குப்பதிவிற்கானபயிற்சி வகுப்புகளில் பங்கேற்பது, வாக்குப்பதிவு தினத்தன்று வாக்குச்சாவடிகளில் பணிபுரிவது,வாக்குப்பதிவு முடிந்த பின்பு வாக்குப்பதிவு எந்திரங்களை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைப்பது, வாக்கு எண்ணிக்கையின் போது பணியாற்றுவது என்கிற அளவிலேயே இருக்கும். இப்போதோ, அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவினங்களை அன்றாடம் கணக்கிட்டு மேலதிகாரிகளுக்கு எடுத்துரைக்க வேண்டிய பணியும் தீவிரமாகவே செய்யப்படுகிறது.
இதற்காக ஊர் ஊராக அலைந்து, அரசியல்கட்சிகளின் பிரசாரக் கூட்டங்கள் இரவு பத்து மணிக்கு முடிவடையும் வரையில் காத்திருந்து, கணக்கெடுத்து,மேலதிகாரிகளுக்கு வீடியோ பதிவுடன் விவரம் கொடுத்துவிட்டு அதன் பின்பே வீடு திரும்பவேண்டிய கட்டாயம். இந்தப் பணியில் பெண் ஊழியர்களும்ஈடுபடுத்தப் படுவது மிகவும் வேதனைக்குரியது.

இப்பணி நியமன விஷயத்தில் குளறுபடிகள் சர்வசகஜமாக நடந்தேறுகின்றன.ஒரே ஊழியருக்கு ஓர் அதிகாரி வாக்குச்சாவடிப் பணி ஒதுக்கி ஆணையிடுவதும், இன்னோர் அதிகாரி செலவுக்கணக்கீட்டுப் பணிக்கான ஆணையிடுவதும் நடக்கிறது. யாருடைய ஆணையைப்பின்பற்றுவது என்று புரியாமல், அந்த ஊழியர் அலைய நேரிடுகின்றது.

பிரசவ விடுப்பில் இருக்கும் பெண் ஊழியருக்குக் கூடத் தேர்தல் பணி ஆணை வழங்கப்படுவதும், அவர் அலறி அடித்துக்கொண்டு வந்து கெஞ்சிக் கூத்தாடி அந்தப்
பணி நியமனத்தை மாற்றிக்கொண்டு செல்வதும் நடக்கத்தான் செய்கிறது.பள்ளித்தேர்வுகள் முடிந்து விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கும் தேர்தல் பணி திணிக்கப்படுகிறது. தேர்தல் பணி என்று ஓர் ஆணை வழங்கப்பட்டுவிட்ட பின்பு, அதனை ஏற்க முடியாத நிலையிலிருப்பவர்களை, விளக்கம் கூடக் கேட்காமல் இடை நீக்கம் செய்ய, தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் பல ஊழியர்களும் (ஆண் பெண் இரு பாலாரும்), மிகுந்த மன உளைச்சலுடன் இத்தேர்தல் பணிகளை மேற்கொள்வதாகத் தோன்றுகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தங்கும் வசதி,
போக்குவரத்து போன்றவற்றுக்குப் போதுமான ஏற்பாடுகளும், இரவு நேரங்களில் பயணிக்க அல்லது தங்கவேண்டியிருக்கின்ற பெண் ஊழியர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்வதில் பொறுப்பேற்காத ஆணையம், தனது உத்தரவின்படி பணியாற்ற முடியாத நிலையில் இருக்கும் ஊழியர்களைப் பணியிடைநீக்கம் செய்வது மட்டும் எந்த விதத்தில் நியாயம் என்பதே பாதிக்கப்படும் அரசு ஊழியர்களின் கேள்வி. தேர்தல் ஆணையம், அரசு ஊழியர்களின் பட்டியலை ஒரு வருடம் முன்பாகவே அரசுத்துறை அலுவலங்களில் கேட்டுப்பெற்று, அவர்களின் பயிற்சி அட்டவணைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, அவர்களுக்கான உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளையும் முறைப்படுத்தி, எதிர்பாராத
தனிப்பட்ட நேர்வுகள் காரணமாக அத்தேர்தல் பணிகளில் பங்குபெற இயலாதவர்களை எவ்வித கெடுபிடிகளும் இன்றி விடுவித்து, அரசுத்துறைப்பணியாளர்களின் ஒத்துழைப்பையும் பெற்றுத்தேர்தலை நடத்தினால் அது சிறப்பாக இருக்காதா என்ன?

இது மட்டுமல்ல, பல்வேறு விதிமுறைகளின்படி தேர்வு பெற்று, பணியமர்த்தப்பட்டு, பணிப்பாதுகாப்பும் பெற்று, நிரந்தரப்பணியிலிருக்கும் அரசு ஊழியர்களை, தனது தேர்தல் நேர அவசரத்தைக்காட்டிப் பணியிடைநீக்கம் செய்யும் அதிகாரம் உண்மையிலேயே தேர்தல்
ஆணையத்திற்கு இருக்கிறதா என்பதை யாராவது விளக்கினால் பரவாயில்லை. ஊழியர்களின் விருப்பம் அல்லது குடும்பச்சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளாமல், கட்டாயமாகத் தேர்தல் பணிகளில் (பணியிடைநீக்கம் என்ற பயமுறுத்தலின் பெயரில்) ஈடுபடுத்தி வேலை வாங்குவது என்பது தனிமனித உரிமையை மீறும் செயல் அல்லவா தனிமனித உரிமையைவிடவா தேர்தல்ஆணையத்தின் அதிகாரம் பெரியது?

இவ்விஷயத்தில், பல்வேறு உரிமைகள் மற்றும் சலுகைகளுக்காகப் போராடும் அரசு ஊழியர் சங்கங்களும், தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தேர்தல்கள் செவ்வனே நடைபெற ஒத்துழைக்கும் அதே வேளையில், பாதிக்கப்படும் தமது சங்க உறுப்பினர்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக