சனி, 7 பிப்ரவரி, 2015

நேரத்தை திட்டமிடுங்கள்......


படிப்பது, புரிந்து கொள்வது, சூத்திரங்களை மனப்பாடம் செய்வது - இவை எல்லாம் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியம் நேரத்தை நேர்த்தியாக திட்டமிடுவது. பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு சாதாரணமாக படிக்கும் ஒரு மாணவர்கூட நேரத்தை நேர்த்தியாக வடிவமைத்து படித்தால் எதிர்பார்த்ததை விட கூடுதல் மதிப்பெண்கள் பெறலாம்.

இன்ன பாடத்துக்கு இத்தனை நாட்கள் என ஒதுக்கீடு செய்து படிக்கலாம். இதற்காக ஓர் அட்டவணையை தயார் செய்து உங்கள் டெஸ்க்கில் ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள். இந்தாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதத்துக்கு ஏழு நாள் விடுமுறை உள்ளது. இந்த அவகாசத்தில் உண்மையிலேயே கணிதத்தை கரைத்துக் குடிக்கலாம்.

பொதுவாக ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, ஹிந்தி ஆகிய மொழிப் பாடங்களுக்கு தலா இரு நாட்கள் ஒதுக்கிக்கொள்ளுங்கள். இயற்பியல், வேதியியல், உயிரியல், கணக்குப் பதிவியல், வணிகவியல் ஆகிய பாடங் களுக்கு தலா நான்கு நாட்கள் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். மீதி உள்ள நாட்களை எந்த பாடத்துக்கு ஒதுக்கி படிக்க வேண்டும் என்பதுதான் இந்த திட்டமிடுதலில் முக்கியமான விஷயம்.

உதாரணத்துக்கு, மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் உயிரியலுக்கு கூடுதலாக ஒருநாளை எடுத்து படிக்கலாம். ஏனெனில், மருத்துவ படிப்புக்கு கடும் போட்டி நிலவி வருவதால், உயிரியல் பாடத்தில் பெறும் மதிப்பெண் முக்கியத்துவம் வாய்ந்தது. அதேபோல, பிற பிரிவு மாணவர்களும், அவர்கள் படிக்க விரும்பும் மேற்படிப்புக்கு ஏற்ற பாடத்துக்கு ஒருநாள் கூடுதலாக ஒதுக்கி படிக்க வேண்டும். இதுதவிர மீதம் உள்ள நாட்களில், எந்தெந்த தேர்வுக்கு இடையே விடுமுறை இல்லாமல் தேர்வு வருகிறது என்பதை பார்த்து, அந்த தேர்வுக்கான பாடத்தை படிக்க கூடுதல் நாட்களை ஒதுக்கலாம்.

ஆண்டுதோறும் பொதுத் தேர்வில், கடைசி தேர்வுக்கு தயாராவதில் மாணவர்கள் அக்கறை காட்டுவதில்லை. முந்தைய தேர்வுகள் எழுதிய களைப்பில், நாளை முதல் பள்ளி நாட்கள் நிறைவடைகிற உற்சாகத்தில் கொண்டாட்டம் மற்றும் அலட்சியம் கலந்த மனோபாவத்தில் இறுதித் தேர்வை எதிர்கொள்கின்றனர். இறுதித் தேர்வு என்பது இறுதிப் போட்டி போன்றது. கடைசி நேர கட் ஆஃபை நிர்ணயிப்பதில் இறுதித் தேர்வுக்கும் பங்கு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். எனவே, இறுதித் தேர்வில் அலட்சிய போக்கை கைவிட்டு, அந்த தேர்வுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து, ஆர்வமுடன் படித்தால் கூடுதல் மதிப்பெண் பெறலாம்.

தேர்வுக்கு தயாராகி வரும் நீங்கள் இரவு வழக்கமாக எத்தனை மணிக்கு படித்துவிட்டு படுக்கைக்கு உறங்கப் போவீர்கள் என்கிற நேரத்தை வரையறுத்துக்கொள்ள வேண்டும். வழக்கமாக நீங்கள் இரவு உறங்கச் செல்லும் நேரம் 10 மணி என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், தேர்வுக்காக ஒரு மணி நேரம் கூடுதலாக செலவிடு கிறீர்கள். அதாவது, இரவு 11 மணிவரை படித்துவிட்டு உறங்கச் செல்கிறீர்கள். அவ்வாறு எனில் இரவு 10 மணியுடன் படிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் ஃபார்முலா, வரைபடம், ஜாமெட்ரி என எழுத்து சார்ந்த பயிற்சியில் ஈடுபட வேண்டும். ஏனெனில், வழக்கமாக இரவு 10 மணிக்கு தூங்க பழக்கப்பட்ட நிலை யில், அந்த நேரத்துக்கு கண்கள் சொருக ஆரம்பித்துவிடும். இதனை தவிர்க்கவே, எழுத்து பயிற்சியில் ஈடுபடுவது அவசியமாகிறது.

அதேபோல் நள்ளிரவு, அதிகாலை என நேரம் மாறி மாறி படிப்பதால் உடல் நலம் கெடும். விடிய விடிய பிரமாதமாக படித்தோம், சாதிப்போம் என்பதெல்லாம் மாயை. எனவே, மனதை லேசாக வைத்துக் கொண்டு, மூளைக்கும், கண்களுக்கும் நல்ல ஓய்வு கொடுத்து, ரிலாக்ஸாக படித்தால் போதுமானது. எனவே, இரவு நேர படிப்பு முறையில் நேரம் ஒதுக்கீடு முக்கியத்துவம் பெறுகிறது.

தேர்வு அறைக்கு கண்டிப்பாக கையில் கடிகாரம் கட்டிக்கொண்டு போக வேண்டாம். அடிக்கடி மணி பார்த்து தேவையில்லாத பதற்றம் அடைவார்கள். தேர்வுத் தாளில் அலங் காரம், ஜோடனை செய்வதை தவிர்க்க வேண்டும். கேள்விக்கான பதிலை முதலில் எழுதுங்கள். முதல் பிரிவில் உள்ள அனைத்து கேள்வி-பதிலும் எழுதி முடித்த பின்,நேரம் இருந்தால் மட்டுமே நீங்கள் எழுதிய பதிலுக்கு தேவையான இடங்களில் அடிக்கோடு இடுவதையும், வண்ணம் தீட்டுவதையும் வைத்துக் கொள்ளலாம்.

ஒரு கேள்விக்கான பதிலை எழுதி முடித்த பின்பு, இரண்டு வரிகள் எழுது வதற்கு தேவையான இடங்களை விட்டு, அடிக்கோடு போடுங்கள். ஏனெ னில், கடைசி தருணத்தில் முதலில் எழுதிய பதில்களுக்கான முக்கிய குறிப்பு கள் மனதில் தோன்றும். அப்போது, ஏற்கெனவே விட்டு வைத்துள்ள இடத்தில், பதிலுக்கான முக்கிய குறிப்பு களை எழுத வசதியாக இருக்கும்.

கணிதம், அறிவியல் பாடங்களில் வரைபடங்கள் மிகவும் நேர்த்தியாகவும், கோடு பிசகாமலும் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. வரைபடத் துக்கான தோற்றம், வரைபடம், குறிப்பு கள் சரியானதாக இருந்தாலே முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என்கிறது விதிமுறை. அதற்காக கிறுக்கி வைக்க வேண்டும் என்பதில்லை. கட்டம் கோணலாக இருக்கிறதே என்று மதிப்பெண்கள் குறைக்க போவ தில்லை. ஸ்கேலை வைத்துக் கொண்டு நேராக கோடு போடுகிறேன் என்று நேரத்தை வீணடிக்க வேண்டாம். கையாலே கோடு போட்டு, சரியான விடை எழுதுங்கள்.

தேர்வு அறையை விட்டு வெளியே வந்ததும், அடுத்த தேர்வுக்கான பாடத்தை படிப்பதில் மட்டுமே அக்கறை செலுத்த வேண்டும். நடந்து முடிந்த தேர்வை பேசி பயனில்லை. நண்பர்களுடன் விவாதம் செய்து நேரத்தை வீணாக் காதீர். தேர்வு ஆரம்பித்து முடியும் வரை ஒவ்வொரு நொடியும் உங்கள் பாடத்துக்கானதாகவும், தேர்வுக்கானது மாக பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் எதிர்கால வாழ்க்கை பிரகாச மாக அமையும்!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக