ஒசூரில் வாட்ஸ்அப் மூலம் பிளஸ்-2 கணிதத் தேர்வுத்தாளை பகிர்ந்த ஆசிரியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக சில தனியார் பள்ளிகளே தங்கள் மாணவர்களுக்கு தேர்வில் உதவுவதாக பரவலாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தனியார் பள்ளி ஒன்றில் வாட்ஸ்அப் மூலம் பிளஸ்-2 கணிதத் தேர்வுத்தாளை பகிர்ந்த ஆசிரியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக போலீஸ் கூறும்போது, "பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்றுமுன் தினம் கணிதத் தேர்வு நடைபெற்றது. அப்போது, ஓசூர் தனியார் பள்ளியில் ஒரு தேர்வு அறையில் 20 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தது. அந்த அறையில் தேர்வெழுத வேண்டிய மாணவர்களில் ஒருவர் வரவில்லை. இந்நிலையில் அந்த அறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் பள்ளி ஆசிரியர் மகேந்திரன் தேர்வுக்கு வராத மாணவனின் வினாத்தாளில் இருந்து ஒரு மதிப்பெண் கேள்விகளை செல்போன் கேமராவில் போட்டோ எடுத்து மற்றொரு ஆசிரியர் உதயகுமாருக்கு அனுப்பியுள்ளார். அந்நேரம், பறக்கும் படையினர் அறைக்குள் நுழைந்துள்ளனர். ஆசிரியர் மகேந்திரனிடம் இருந்து செல்போனை கைப்பற்றினர். உடனடியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மகேந்திரன், உதயகுமார், கோவிந்தன, கார்த்திகேயன் 4 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், வாட்ஸ்அப் மூலம் மற்றொரு ஆசிரியருக்கு கேள்விகளை அனுப்பி அதற்கான பதில்களைப் பெற்று மாணவர்களுக்கு தெரிவிக்கவே அவ்வாறு செய்ததாக கைதான ஆசிரியர்கள் கூறினர்" என தெரிவித்தனர்.

மாவட்ட கல்வி அதிகாரிக்கு தொடர்பா?

பொதுவாக பிளஸ்-2 தேர்வு கண்காணிப்புப் பணியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதில்லை. ஆனால், ஓசூர் கல்வி வட்டத்தில் மட்டும் தேர்வு கண்காணிப்புப் பணியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னணியில் மாவட்ட கல்வி அதிகாரி வேதக்கண் தன்ராஜூக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி விசாரணை மேற்கொண்டுள்ளார்.

'தி இந்து'வுக்கு அதிகாரி அளித்த பதில்:

தனியார் பள்ளிகள் சில முறைகேடுகளில் ஈடுபட்டாவது மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற தவறான பாதையில் செல்வதாக தொடர்ந்து வரும் புகார்கள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமியிடன் தி இந்து சார்பில் கேள்வி எழுப்பபட்டது. அதற்கு அவர், "அவ்வாறாக எந்தப் புகாரும் இல்லை" என்றார்.

தொடர்ந்து நமது தரப்பிலிருந்து, தனியார் பள்ளி ஆசிரியருக்கு எவ்வாறு அரசு தேர்வுகளை கண்காணிக்க அனுமதி அளிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், தேர்வு அறைக்குள் ஆசிரியர்கள் செல்போன் கொண்டு செல்லக் கூடாது என்ற விதிமுறையையும் மீறி எப்படி ஆசிரியர் உதயகுமார் செல்போன் கொண்டு சென்றார் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ராமசாமி, "இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளி ஆசிரியருக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என ஒசூர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் விசாரித்து வருகிறோம். அதன்படி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தார்.

சிறையில் அடைப்பு:

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன், கார்த்திகேயன், உதயகுமார் ஆகிய நான்கு பேரும் ஒசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.