அமெரிக்க உளவியல் நிபுணர், சமூக நடத்தைகள் ஆய்வாளர் பர்ஹஸ் ஃபிரெடரிக் ஸ்கின்னர் (Burrhus Frederic Skinner) பிறந்த தினம்  மார்ச் 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் பென்சில்வே னியா மாநிலத்தில் (1904) பிறந்த வர். ஹாமில்டன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்கும் போது எழுத்தில் ஆர்வம் பிறந்தது. கவிதைகள், சிறுகதைகள் எழுதி னார்.

* 1926-ல் பட்டம் பெற்ற பிறகு, முழு நேர எழுத்தாளராக விரும்பினார். முயற்சி கைகூடாததால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். உளவியலில் முனைவர் பட்டம் பெற்றார். அப்போது, விலங்குகள் நடந்துகொள்ளும் விதங்கள் குறித்து ஆராய்ந்தார்.

* சரியான நடத்தை முறை உத்தியை (Behavioral Technique) பயன்படுத்தி, மனிதர்கள் நடந்துகொள்ளும் முறையை மேம்படுத்த முடியும் என்று நம்பினார். விளைவுகளைப் பொருத்தே உயிரினங்களின் நடத்தை முறைகள், எதிர்வினைகள் அமைகின்றன என்பதைக் கண்டுபிடித்தார். உயிரினங்களின் நடத்தையை பகுப்பாய்வு செய்து அறிய உதவும் ஆபரன்ட் கண்டிஷனிங் (Operant Conditioning) என்ற ஆய்வக சாதனத்தை மேம்படுத்தினார்.

* இதற்காக ஆபரன்ட் கண்டிஷனிங் கூண்டு ஒன்றை உருவாக்கினார். இது 'ஸ்கின்னர் பாக்ஸ்' எனப்படுகிறது. எலிகள், புறாக்கள் ஆகியவை வாழும் சூழலுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதை இதன் உதவியுடன் ஆராய்ந்தார்.

* சூழலுக்கு ஏற்ப அவை தங்களது நடத்தை முறைகளை எவ்வாறு மாற்றிக்கொள்கின்றன என்பதையும் கண்டறிந்தார். இதில் கண்டறிந்தவற்றைத் தொகுத்து 'தி பிஹேவியர் ஆர்கானிசம்ஸ்' என்ற கட்டுரையை வெளியிட்டார். நடத்தை உளவியல் குறித்து 21 புத்தகங்கள், 180 கட்டுரைகளை எழுதியுள்ளார்.

* இண்டியானா பல்கலைக்கழகத்தில் உளவியல் துறைத் தலைவராக 1945-ல் நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகள் கழித்து ஹார்வர்டு திரும்பினார். இறுதிவரை அங்கு பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

* தனது கோட்பாடுகளை அடிப்படையாக கொண்ட சமுதாயத்தை விவரிக்கும் 'வால்டன் டூ' என்ற நாவலை எழுதினார். 'குழந்தைகளுக்குப் பொருத்தமான பரிசுகள், தண்டனைகள் வழங்கி அவர்களது பழக்க வழக்கங்களை திருத்திக்கொள்ள உதவுங்கள். அதன்மூலம், அவர்களை நல்ல குடிமக்களாக மாற்ற முடியும்' என்று இந்த நாவலில் கூறியுள்ளார். குழந்தைகள் கற்றுக்கொள்ளும் முறை குறித்து ஆராய்ந்தார். 'தி டெக்னாலஜி ஆஃப் டீச்சிங்' என்ற நூலை எழுதினார்.

* சமுதாய, மனித நடத்தை முறைகள் தொடர்பான இவரது பல கோட்பாடுகள் சர்ச்சைகளைக் கிளப்பின. அதே நேரம், நடத்தை முறை உளவியல் களத்தில் மேலும் பல ஆராய்ச்சிகள் நடைபெற இவரது ஆய்வுகள் அடித்தளமாக அமைந்தன.

* இவரது பல கோட்பாடுகள் அதிகம் பயன்படுத்த முடியா மல் போனாலும் இவரது நேர்மறை வலுவூட்டும் உத்தி (Positive Reinforcement Technique) இவரை அடையாளப் படுத்தும் முக்கிய கோட்பாடாகப் புகழப்படுகிறது.

* பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கின. ஏராளமான விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார். சிக்மண்ட் ஃபிராய்டுக்குப் பிறகு சிறந்த உளவியலாளராக புகழ்பெற்ற பி.எஃப்.ஸ்கின்னர், 86 வயதில் (1990) மறைந்தார்.