திங்கள், 16 மார்ச், 2015

ஆதார் அட்டைகள் இல்லை என்பதற்காக எந்த ஒரு நபருக்கும் பயன்களை மறுக்கக் கூடாது, அதனால் அவர் பாதிப்படையக் கூடாது”-உச்ச நீதிமன்றம்

ஆதார் அட்டை கேட்டு மக்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஆதார் அட்டை இல்லாததன் காரணமாக மக்களுக்கு சேர வேண்டிய நலன்கள் போகாமல் இருக்கக் கூடாது என்றும், ஆதார் அட்டை கேட்டு தொந்தரவு செய்யவேண்டாம் என்றும், இது குறித்து தங்களது முந்தைய உத்தரவை மத்திய, மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

"ஆதார் அட்டையை சில அதிகாரிகள் மக்களிடத்தில் வலியுறுத்துவதாக எங்கள் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. நாங்கள் இது குறித்த தனிப்பட்ட சம்பவங்களுக்குள் செல்ல விரும்பவில்லை. 

இது குறித்து செப்.23, 2013 அன்று நாங்கள் பிறப்பித்த உத்தரவுகளை மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும்." என்று நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான அமர்வு இன்று திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து ஒருவர் செய்த மனுவின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம், "நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி, அதிகாரிகள் சிலர் குத்தகை ஒப்பந்தம், திருமண பதிவு போன்ற விஷயங்களுக்காக ஆதார் அட்டையை வலியுறுத்தி வருகின்றனர். இது ஒரு பெரிய கவலையளிக்கும் விஷயமாகும்" என்றார்.

இதற்கு நீதிபதிகள், "எங்கள் கவனத்துக்கும் இத்தகைய விவகாரங்கள் வந்துள்ளது. எங்களது முந்தைய உத்தரவுகளை கடைபிடிக்க கோருகிறோம்." என்றனர்.

மேலும், அரசு சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமாரை நோக்கி, "உங்களுக்கு இதற்காக மேலும் வாய்ப்புகள் அளிக்க முடியாது." என்றனர். அதற்கு பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல், "இது குறித்து அனைத்து தலைமைச் செயலர்களுக்கும் உடனடியாக மத்திய அரசு தகவல் அனுப்பும்" என்றார்.

இந்த விசாரணையின் போது, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளிடத்திலும் அதிகாரிகள் சிலர் ஆதார் அட்டையை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளதை தெரிவித்தனர். 

ஆதார் அட்டை வலியுறுத்தலுக்கு எதிராக நிறைய மனுக்கள் உச்ச நீதிமன்ற்த்தில் குவிந்துள்ளன. இறுதி கட்ட விசாரணை தற்போது ஜூலை மாதம் 2ஆம் வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக