சனி, 21 மார்ச், 2015

ஓசூர், தனியார் பள்ளியில், பிளஸ் 2 வினாத்தாளை, 'வாட்ஸ் அப்' மூலம் அனுப்பியதாக, ஒரே பள்ளியைச் சேர்ந்த, நான்கு ஆசிரியர்கள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தனியார் பள்ளியில், பிளஸ் 2 வினாத்தாளை, 'வாட்ஸ் அப்' மூலம் அனுப்பியதாக, ஒரே பள்ளியைச் சேர்ந்த, நான்கு ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும், கடந்த, 5ம் தேதிமுதல், பிளஸ் 2 தேர்வு நடந்து வருகிறது. ஓசூர் கல்வி மாவட்டத்தில், 9,206 மாணவ, மாணவியர், 17 மையங்களில் தேர்வு எழுதி வருகின்றனர். பொதுத் தேர்வில், காப்பி அடிப்பதைத் தடுக்க, முறைகேடுகளை கண்காணிக்க, பள்ளி கூடுதல் ஆய்வாளர் சென்னீரப்பன் மேற்பார்வையில், பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. ஓசூர், -தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள, தின்னுார், பரிமளம்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், கடந்த, 18ம் தேதி காலை, கணிதத் தேர்வு நடந்தது. இந்த மையத்தில், 323 பேர் தேர்வு எழுத இருந்தனர். பள்ளியில் இருந்த, 14 வகுப்பு அறைகளில், ஒரு அறையில் மட்டும், 20 மாணவர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அந்த அறையில், ஒரு மாணவன் மட்டும் தேர்வு எழுத வரவில்லை.அந்த அறையில், தேர்வு கண்காணிப்பாளராக, ஓசூர், பாகலுார், ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள, தனியார் பள்ளி ஆசிரியர் மகேந்திரன் பணியாற்றினார். தேர்வு துவங்கிய சிறிது நேரத்தில், அவர், மொபைல் போன் மூலம், தேர்வுக்கு வராத மாணவனின், வினாத்தாளை புகைப்படம் எடுத்தார். அதை, 'வாட்ஸ் அப்' மூலம், மத்துாரில் உள்ள, ஒரு தேர்வு மையத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய, அதே பள்ளி ஆசிரியர் உதயகுமார் என்பவருக்கு அனுப்பினார். அதை மேலும், இருவருக்கு அனுப்பினார்.

பரிமளம் மெட்ரிக் பள்ளிக்கு வந்த, சி.இ.ஓ., ராமசாமி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள், சந்தேகத்தின் அடிப்படையில், தேர்வு கண்காணிப்பாளர் மகேந்திரனை சோதனை செய்தனர்.அப்போது, அவரது பேன்ட் பாக்கெட்டில், மொபைல் போன் இருந்தது. தேர்வு மையத்திற்குள் விதிமுறைகளை மீறி, மொபைல் போன் எடுத்து வந்தது குறித்து, பறக்கும் படை அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். மொபைல் போனை வாங்கி சோதனை செய்த போது, அதில், 'வாட்ஸ் அப்' மூலம், கணிதத் தேர்வு வினாத்தாள் அனுப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட தேர்வு மைய கண்காணிப்பு பொறுப்பாளரான, அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்குனர் நாகராஜ முருகனிடம் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சி.இ.ஓ., ராமசாமி, கொடுத்த புகாரின் பேரில், எஸ்.பி., கண்ணம்மாள் விசாரணை நடத்தினார். இதில், தனியார் பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன், உதயகுமார், கார்த்திகேயன் ஆகியோர், 'வாட்ஸ் அப்' மூலம், கணித வினாத்தாளை அனுப்பியதும், பெற்றதும் தெரிய வந்தது.நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்; ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர். மேலும், ஓசூர் தனியார் மெட்ரிக் பள்ளி முதல்வர் சம்பத்குமார் உட்பட சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ராஜேஷ் கூறியதாவது :இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஓசூரில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு நடக்கும் அனைத்து பள்ளிகளும், ஓசூர், சப் - கலெக்டர் தலைமையில், தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. இவ்வாறு, கலெக்டர் கூறினார். இந்த விவகாரத்தில், எத்தனை மாணவர்பயன் அடைந்தனர்; இதே போல், எந்தெந்த தேர்வுக்கு, 'வாட்ஸ் அப்' மூலம் வினாத்தாள் அனுப்பப்பட்டது என்பது குறித்து, போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.குறிப்பிட்ட தனியார் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்காணிப்பு கேமரா : ஆசிரியர் மகேந்திரன் மொபைல் போனில் புகைப்படம் எடுத்து, 'வாட்ஸ் அப்' மூலம், மற்ற ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட காட்சிகள், தேர்வு மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. இதை, பரிமளம் பள்ளி நிர்வாகிகள் ஒப்புக் கொண்டனர்.
ஆனால், இதை உறுதிப்படுத்த போலீசார் மறுத்து விட்டனர்.
ஆசிரியர் மீது என்ன நடவடிக்கை?
ஆசிரியர் மகேந்திரன் கைது செய்யப்பட்டதுடன், அவரை, 'டிஸ்மிஸ்' செய்ய, தனியார் பள்ளிக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர் காப்பியடித்தால், ஐந்து ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை விதிக்கப்படுகிறது. இப்போது ஆசிரியர் பிடிபட்டதால், அவரின் படிப்பு சான்றிதழை, சில ஆண்டுகள் நிறுத்தி வைக்கலாமா என, கல்வித்துறை அதிகாரிகள், சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்துகின்றனர்.
அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: அறை கண்காணிப்பாளர் நியமனம், பறக்கும் படை சோதனையில் பாரபட்சமான நிலை உள்ளது. அரசு பள்ளி மாணவர் என்றால் தீவிரமாக சோதிக்கின்றனர். தனியார் பள்ளி தேர்வு மையங்கள், தனியார் பள்ளி மாணவர்கள் எழுதும் அரசுப் பள்ளி தேர்வு மையங்களை, கண்டும் காணாமல் செல்கின்றனர். இதனால், அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் மட்டும், பறக்கும் படையிடம் பிடிபடுகின்றனர். அரசுப் பள்ளி ஆசிரியர்கள், வேறு மாவட்ட தேர்வுப் பணிக்கு அனுப்பப்படுகின்றனர். தனியார் பள்ளி ஆசிரியர்கள் அருகருகிலேயே தேர்வுப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக