கல்வியாளரும், நீர்வளத் துறை வல்லுநருமான வா.செ.குழந்தைசாமி (V.C.Kulandaiswamy) 

l கரூர் மாவட்டம் வாங்கலாம் பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் (1929). கரக்பூர் ஐஐடி-யில் முதுநிலை பட்டம் பெற்றவர். ஜெர்மனி, அமெரிக்காவில் உயர்கல்வி பயின்றார். இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நீர்வளத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

l நீர்வளத் துறையில் இவரது கண்டுபிடிப்பு 'குழந்தைசாமி மாதிரியம்' எனப்படுகிறது. யுனெஸ்கோ நீர்வளத் துறைத் திட்டக் குழு உறுப்பினர் உட்பட உலக அளவில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

l தமிழகத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், நீர்வளத்துறை பேராசிரியர் போன்ற பொறுப்புகளிலும் சென்னை அண்ணா, மதுரை காமராஜர், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மொத்தம் 15 ஆண்டுகள் துணைவேந்தராகவும் இருந்தவர்.

l சர்வதேச தொலைநிலைக் கல்விக் குழுவின் ஆசிய துணைத் தலைவராக, காமன்வெல்த் நாடுகளின் பல்கலைக்கழகங்கள் குழுத் தலைவராக பணியாற்றியவர். சிறந்த கல்வியாளர்.

l நீரியல், நீர்வளம், கல்வி போன்றவை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும், படைப்பாற்றலும் மிக்கவர்.

l சிறந்த கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், பேச்சாளர். குலோத்துங்கன் என்ற பெயரில் பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவரது படைப்புகள் தமிழில் 10 கவிதைத் தொகுப்புகள், 12 உரைநடை நூல்களாக மட்டுமல்லாமல் ஆங்கிலத்தில் 6 உரைநடை நூல்களாகவும் ஒரு கவிதை நூலாகவும் வெளிவந்துள்ளன. இவரது அனைத்து கவிதைகளின் தொகுப்பு 'குலோத்துங்கன் கவிதைகள்' என்ற தலைப்பில் 2002-ல் வெளிவந்தது.

l தனது சில கவிதைகள், நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இவரது நூல்கள், கட்டுரைகள் பல பல்கலைக் கழகங்களில் பாட நூல்களாகவும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பாடமாகவும் இடம்பெற்றுள்ளன.

l தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, தமிழ் இலக்கிய பங்களிப்புக்காக சாகித்ய அகாடமி விருது, கல்வி, அறிவியல் துறை பங்களிப்புக்காக பத்ம, பத்மபூஷண் விருது பெற்றவர். தமிழில் அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைப் படைத்தல், தமிழ் மொழியை நவீனப்படுத்துதல், தமிழ் கற்பதை எளிமையாக்குதல் ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.

l கலைச் சொல்லாக்கம், புதிய சொற்களை உருவாக்கும் உத்திகள் குறித்து பல நூல்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ் எழுத்துச் சீரமைப்புப் பணியை லட்சியமாக கொண்டவர். வரிவடிவச் சீரமைப்புப் பணியை கடந்த 36 ஆண்டுகளாக ஓர் இயக்கமாகவே நடத்தி வருகிறார். 247 தமிழ் ஒலி எழுத்துகளைக் குறிப்பிட அதிகபட்சம் 39 குறியீடுகளுக்கு மேல் தேவை இல்லை என்பது இவரது உறுதியான கருத்து.

l தமிழ் இணையப் பல்கலைக்கழக நிறுவனத் தலைவரான இவர், தற்போது தமிழ் மெய்நிகர்ப் பல்கலைக்கழக சமூகத்தின் தலைவர், சென்னை தமிழ் அகாடமி தலைவர், உலகத் தமிழ் ஆய்வுக்கழகத் துணைத் தலைவர், தமிழ் மொழி மேம்பாட்டு வாரியத் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்து வருகிறார்.