அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 'அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்' வழங்கும் திட்டத்தினை 7.9.2015 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இதற்கு அடையாளமாக 5 குழந்தைகளின் தாய்மார்களுக்கு பெட்டகத்தினை அவர் வழங்கினார்.

இது தொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 'அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்' வழங்கப்படும் என முதல்வர் சட்டப் பேரவையில் அறிவித்திருந்தார்.

அதன்படி, நடப்பாண்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, 67 கோடி ரூபாய் செலவில் அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக 5 குழந்தைகளின் தாய்மார்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று (திங்கள்கிழமை) 7.9.2015 அன்று தலைமைச் செயலகத்தில் பெட்டகத்தை வழங்கி வாழ்த்தினார்.

இந்த அம்மா குழந்தை நல பரிசு பெட்டகத்தில் குழந்தையை பாதுகாப்பாக பராமரிப்பதற்குத் தேவையான பராமரிப்புத் துண்டு, குழந்தைக்கான உடை, படுக்கை, கொசு வலை, நாப்கின், 100 மில்லி லிட்டர் அளவு கொண்ட எண்ணெய் டப்பா, பிளாஸ்டிக் குப்பியில் 60 மில்லி லிட்டர் ஷாம்பூ, சோப்புடன் கூடிய சோப்புப் பெட்டி, நக வெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, சுத்தமான கைகளுடன் குழந்தையை பராமரிக்க பிளாஸ்டிக் டப்பாவில் 250 மில்லி லிட்டர் அளவு கை கழுவும் திரவம், பிரசவித்த தாய்க்கு 100 கிராம் எடையுள்ள சோப்பு, பிரசவித்த தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தாய்ப்பாலை அதிகரிக்கவும் 'சௌபாக்கியா' சுண்டிலேகியம், தாய் மற்றும் பச்சிளம் குழந்தையைப் பராமரிக்க தேவையான பொருட்களை வைத்துக் கொள்ள ஒரு பெட்டகம் ஆகிய 16 வகையான பொருட்கள் உள்ளடக்கி உள்ளன. இப்பெட்டகத்தின் மதிப்பு 1000 ரூபாய் ஆகும்"

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.