திங்கள், 24 பிப்ரவரி, 2014

பிளஸ்–2 மற்றும் 10–ம் வகுப்பு பொது தேர்வுகள்:இரவு நேரங்களில் மின்சாரம் தடை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிளஸ்–2 மற்றும் 10–ம் வகுப்பு பொது தேர்வுகள் ஆரம்பிக்க உள்ள நிலையில் இரவு நேரங்களில் மின்சாரம் தடை செய்ய வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறியதாவது:– மின்சாரத்தின் தேவை அதிகரிப்பு தமிழகத்தில் கடந்த 2 மாதங்கள் இரவு நேரங்களில் பனிபொழிவு இருந்ததால் மின்சாரத்தின் தேவை குறைந்து சராசரியாக 10 ஆயிரம் மெகாவாட் என்ற அளவுக்கு தேவை இருந்துவந்தது. ஆனால் தற்போது பனிபொழிவு குறைந்து, கோடைக்காலம் தொடங்கவிருப்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மின்சாரத்தின் தேவையும் 1,500 மெகாவாட் அதிகரித்து தற்போது, 11 ஆயிரத்து 500 மெகாவாட் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி செய்வதிலும் பல்வேறு இடையூறுகளும் ஏற்படுகிறது. குறிப்பாக அனல் மின்நிலையங்களில் திடீரென்று கன்வேயர் பெல்ட் தீப்பிடிப்பது, டியூப்கள் வெப்பத்தின் தாக்கத்தால் பஞ்சர் ஆவது போன்ற இடையூறுகள் ஏற்படுகிறது. எந்திரங்களும் பழுதாவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனை 24 மணி நேரமும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் புதிய அனல் மின் நிலையங்களில் மின்சாரத்தின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. காற்றாலைகள் மூலமும் தற்போது சராசரியாக 200 மெகாவாட் என்ற அளவில் மின்சாரம் கிடைக்கிறது.

பிளஸ்–2 பொதுதேர்வு மார்ச் 3–ந்தேதி தொடங்கி மார்ச் 25–ந்தேதியும், 10–ம் வகுப்பு பொதுதேர்வு மார்ச் 26–ந்தேதி தொடங்கி ஏப்ரல் 9–ந்தேதி வரை நடக்கவிருப்பதால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். எனவே இரவு நேரங்களில் மின்சார தடை செய்ய வேண்டாம் என்றும் மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் காலை 6 மணியிலிருந்து இரவு 6 மணிக்குள் தான் ஒதுக்கப்பட்ட நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இரவு நேரங்களில் மின்சாரம் தடை செய்யப்படுவதில்லை. அவ்வாறு செய்தால் துணைமின்நிலையங்களில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் தான் மின்சாரம் தடை ஏற்படும்.
மாணவர்களின் தேர்வை கருத்தில் கொண்டு முடிந்த அளவு அனைத்து மாவட்டங்களிலும் இரவு நேரங்களில் மின்சாரம் தடை செய்ய வேண்டாம் என்று மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக