சனி, 22 பிப்ரவரி, 2014

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வு:முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அரசு தேர்வு இயக்குனரகம் சுற்றறிக்கை

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுக்கு தயாராக இருப்பதற்கு உரிய பல்வேறு அறிவுரைகளையும் சுற்றறிக்கையாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அரசு தேர்வுகள் இயக்குனரகம் அனுப்பி உள்ளது.
தேர்வுகள் பிளஸ்–2 தேர்வு மார்ச் மாதம் 3–ந்தேதி தொடங்கி மார்ச் 25–ந் தேதி முடிவடைகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 26–ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9– ந்தேதி முடிவடைகிறது.
தேர்வுகள் தொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:–
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வு நடைபெற உள்ளதையொட்டி மாணவ–மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு விடைத்தாள்கள், உறைகள், போன்ற எழுதுபொருட்கள் அனைத்து எழுது பொருள் விநியோக மையங்களுக்கு கடந்த 17–ந்தேதி முதல் 19–ந்தேதி வரை அனுப்பப்பட்டுள்ளன. இந்த விடைத்தாள்கள் சரியாக கிடைத்துள்ளதை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும்.
முதன்மை கல்வி அதிகாரிகள், தேர்வுகள் சம்பந்தமாக தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை நடத்தி அவர்களுக்கு தேர்வுகள் தொடர்பாக தக்க அறிவுரை வழங்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விடைத்தாளுடன் முதல் பக்கத்தில் தைக்கக் கூடிய முதல் பக்க தாளை (டாப் ஷீட்) பெற்றுக் கொள்ள வேண்டும்.
விடை எழுத உள்ள தாள்கள் தலைமை ஆசிரியர்கள் உயிரியல் பாடம், கணக்கு பதிவியல் மற்றும் ஏனைய பாடத்திற்கான விடைத்தாள்கள், விடைத்தாள் இடப்பட வேண்டிய உறைகள், வரைபடங்கள், கிராப் ஷீட்கள் ஆகியவை சரியாக கிடைத்து விட்டதை உறுதி செய்ய வேண்டும்.
விடைத்தாளின் முகப்பு தாள்கள் அந்தந்த பாடத்திற்கு உரியதாக இருக்க வேண்டும். மாற்றி வைக்கக்கூடாது. அவ்வாறு மாற்றி தைத்தால் பிரச்சினை எழும். அது மட்டுமல்ல விடைத்தாள்களை அதற்கு உரிய உறைகளில் வைக்க வேண்டும். எனவே இந்த பணியில் தலைமை ஆசிரியர்கள் மிகுந்த கவனமாக இருந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக