மேற்கு இமயமலையில் உள்ள கிரேட் இமாலயன் தேசியப் பூங்காவை, உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ தேர்வுக்குழு இன்று (திங்கள்கிழமை) மதியம் அறிவித்தது.

உலகப் பாரம்பரிய சின்னங்களை தேர்வு செய்யும் கூட்டம் இம்மாதம் 15-ம் தேதி தொடங்கி கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது.

யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னங்களுக்கான தேர்வு கமிட்டியின் உறுப்பினர்களாக இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், மலேசியா, பின்லாந்து, பிலிப்பைன்ஸ், அல்ஜீரியா, கொலம்பியா, கத்தார், வியட்நாம் உட்பட 21 நாடுகளின் பிரதிநிதிகள் இருக்கின்றனர்.

தற்போது நடைபெற்று வரும் 38-வது தேர்வு கமிட்டி கூட்டத்தில் கிரேட் இமாலயன் தேசியப் பூங்காவை, இயற்கைச் சார்ந்த இடங்கள் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, குஜராத் பாட்டன் டவுனில் இருக்கும் ராணி கிவ் வாவ் படித்துறை (Rani-ki-vav - The Queen's Stepwell) கலாச்சாரம் சார்ந்த உலகப் பாரம்பரியச் சின்னமாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலை, சுந்தரவனக் காடுகள், அஸ்ஸாமின் காசிரங்கா தேசியப் பூங்கா, மானாஸ் வன விலங்குகள் சரணாலயம், உத்தர கண்ட்டின் நந்தாதேவி மலர்கள் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா ஆகியவை யுனெஸ்கோவின் இயற்கை பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

யுனெஸ்கோவின் இயற்கை சார்ந்த தேசியப் பாரம்பரிய சின்னங்களுக்கான விதிமுறைப் பட்டியல் 10-ன் படி "நீடித்த இயற்கை மற்றும் உயிரி பல் வகைமை (Bio - diversity) அடர்த்தி மிகுந்த பகுதிகள் அறிவியல் ரீதியாக பாதுகாக்கப்பட வேண்டும்" என்கிற அடிப்படையில் கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா உலகப் பாரம்பரியச் சின்னமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1984-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பூங்கா 1999-ம் ஆண்டு தேசியப் பூங்காவாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 754.4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்தப் பூங்காவில் சன்ஜ் (sainj) மற்றும் தீர்த்தன் (Tirthan) ஆகிய இரு வன விலங்குகள் சரணாலயங்கள் அமைந்துள்ளன.

மேலும் இந்த பூங்காவின் மேல் பகுதியில் அமைந்திருக்கும் பனி மலை முகடுகளே பியாஸ் நதி மற்றும் அதன் துணை நதிகளான பார்வதி, சன்ஜ், தீர்த்தன், ஜூவானல் ஆகியவற்றுக்கு நீர் ஆதாரங்களாக விளங்குகின்றன.