செவ்வாய், 24 ஜூன், 2014

ஆசிரியை மனைவிக்கு சொந்த மாவட்டத்துக்கு இடமாறுதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாற்றுத் திறனாளி கணவர் தர்னா

திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தனது ஆசிரியை மனைவிக்கு சொந்த மாவட்டத்துக்கு இடமாறுதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாற்றுத் திறனாளி கணவர் தர்னாவில் ஈடுபட்டார்.

வள்ளியூர் ஒன்றியம், வடக்கன்குளம் அருகே புதியம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த செல்லையா மகன் நெல்சன் (53). மாற்றுத்திறனாளி. இவரது மனைவி சு. ஆடலின் ரெஜினாபாய். இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக கரூர் மாவட்டம், கரூர் வட்டாரம், அரசக்கவுண்டனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணி நியமனம் கிடைத்தது.பணியில் சேர்ந்து 5 வருடமாகியும், ஆடலின்ரெஜினாபாய்க்கு பணியிட மாறுதல் கிடைக்கவில்லையாம். 3 ஆண்டுக்கு பிறகு பணியிட மாறுதல் அளிக்க வேண்டும் என்ற விதி இருந்தபோதிலும் அவருக்கு கல்வித்துறை அதிகாரிகள் பணியிட மாறுதல் அளிக்கவில்லையாம்.

இதனை அடுத்து அவரது கணவர் நெல்சன், முதல்வர், கல்வித்துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு தனது மனைவி ஆடலின்ரெஜினாபாய்க்கு சொந்த மாவட்டமான திருநெல்வேலிக்கு பணியிட மாறுதல் வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தாராம். எனினும் கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே தனது மனைவிக்கு பணியிட மாறுதல் அளிக்குமாறு வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்த நெல்சன், அலுவலகம் முன்பு அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார். மாற்றுத்திறனாளியான தனக்கும், தனது குழந்தைக்கும் ஆதரவாக இருக்கும் வகையில் மனைவிக்கு பணியிட மாறுதல் அளிக்க வேண்டும் என நெல்சன் கண்ணீர் மல்க தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக