ஜவுளிக் கடைகள், லாட்ஜ்களில் ரகசிய கேமராக்களை பொருத்தி பெண்கள் உடை மாற்றுவது போன்ற காட்சிகளை படம் எடுக்கும் அநாகரிகம் பரவலாக நடந்துவருகிறது. இத்தகைய சூழலில், பொது இடங்களுக்குச் செல்பவர்கள் உஷாராக இருக்கவேண்டியது அவசியமாகிறது.

சில ஜவுளிக் கடைகளின் உடை மாற்றும் அறைகள், சில லாட்ஜ் களின் படுக்கை அறைகளில் ரகசிய கேமரா வைக்கப்படுகின்றன. இதில் பதிவாகும் காட்சிகளை சிலர் பார்த்து ரசிப்பதோடு, இணைய தளங்கள் வரை பதிவேற்றம் செய்யப்படுகின்றன என்ற புகார் பரவலாக கூறப்படுகிறது. கோவாவில் ஒரு ஜவுளிக் கடைக்கு சென்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அங்கு உடை மாற்றச் சென்றபோது ரகசிய கேமரா இருந்ததை கண்டுபிடித்த விவகாரம் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், இதுபோன்ற இடங்களுக்கு செல்லும்போது உஷாராக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வையும் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

உடை மாற்றும் அறை, குளியல் அறை, படுக்கை அறை போன்றவற்றில் மறைத்து வைக் கப்படும் ரகசிய கேமராக்கள் சிசிடிவி (கண்காணிப்பு கேமரா) போல பெரிய அளவில் இருக் காது. கண்ணுக்கு தெரியாத இடத்தில் மிக மிக சிறிய அளவில் பொருத்தப்பட்டிருக்கும். ஸ்குருவின் தலைப்பகுதி, கடிகாரம், பிளக் பாய்ன்ட், பிளக் ஹோல்டர், முகம்பார்க்கும் கண்ணாடியின் பின்புறம், குளிர்சாதன பெட்டி, கதவின் கைப்பிடி என எதிலும் இதைப் பொருத்தமுடியும். லாட்ஜ்களில் படுக்கை, குளிக்கும் இடம் ஆகியவற்றை நோக்கியுள்ள அனைத்து இடங்களையும் முதலில் கவனமாகப் பார்க்க வேண்டும். விளக்கை அணைத்த பிறகு, இருட்டாக உள்ள அறைகளில் படம் பிடிக்கக்கூடிய நவீன அகச்சிவப்பு கேமராக்களையும் இந்த அநாகரிக வேலைக்கு பயன் படுத்துகிறார்கள்.

கண்டுபிடிப்பது எப்படி?

ஹோட்டல் அறைக்குள் நுழைந்ததும் அனைத்து மின் விளக்குகளையும் அணைத்து விட்டு, அறை முழுவதையும் செல்போனில் வீடியோ எடுங்கள். பின்னர் அதை ஓடவிட்டுப் பாருங்கள். எந்த இடத்திலாவது சிவப்பு அல்லது வெள்ளை நிற ஒளி வந்தால் கேமரா இருக்கிறது என்று அர்த்தம்.

செல்போனில் யாரிடமாவது பேசியபடியே அறை முழுவதும் மெதுவாக நடந்து செல்லுங்கள். திடீரென இரைச்சல் சத்தம் கேட்டால், அருகே ரகசிய கேமரா போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் இருக்கிறது என்று உணர்ந்துகொள்ளலாம்.

ரகசிய கேமரா மட்டு மின்றி, முகம் பார்க்கும் கண்ணாடி யால் கூட வில்லங்கம் ஏற்பட லாம். பொது வாக உயர் அளவிலான போலீஸ் விசாரணை, ஆட்களை அடையா ளம் காட்டுதல் போன்றவற்றுக்கு 'டூ வே' (இருபக்க) கண்ணாடி பயன்படுத்தப்படும். அதாவது, முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடிதான். ஆனால், அதன் பின்னால் இருந்துகொண்டு இங்கு நடப்பதை பார்க்க முடியும். அவர்கள் இருப்பது இங்கிருந்து தெரியாது. லாட்ஜ்கள், ஜவுளிக் கடைகளில் இருப்பது இத்தகைய கண்ணாடி இல்லை என்பதை உறுதிசெய்துகொள்வது அவசியம்.

வழக்கத்தைவிட உங்கள் அறையில் விளக்கு வெளிச்சம் அதிகமாக, கண்ணை கூசும் அளவில் இருந்தால், அங்கு இருப்பது இருபக்க கண்ணாடி யாக இருக்க வாய்ப்பு அதிகம். ஏனென்றால், மங்கலான வெளிச் சத்தில் இத்தகைய கண்ணாடி வழியாக தெளிவாக ஊடுருவிப் பார்க்க முடியாது.

விளக்குகளை அணைத்துவிட்டு கண்ணாடி மீது டார்ச் அடித்துப் பார்த்தால், பின்னால் ஏதேனும் இருக்கிறதா என்பதை அறியலாம். கருப்பு பிலிம் ஒட்டப்பட்ட காருக்குள் பார்ப்பதுபோல, இரு கைகளையும் அணைத்து வைத்தபடி கண்ணாடியோடு முகத்தை ஒட்டிக்கொண்டு பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியும். இன்னொரு எளிய வழி. கண்ணாடி முன்பு நின்று உங்கள் விரலால் கண்ணாடியை தொடுங்கள். விரல் நுனிக்கும் கண்ணாடியில் தெரியும் பிம்பத்துக்கும் நடுவே இடைவெளி இருந்தால், அது முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடி. கொஞ்சம்கூட இடைவெளியின்றி விரலும் பிம்பமும் ஒட்டிக்கொண்டிருந்தால், உஷார்! அது இருபக்க கண்ணாடி.

இதுபோல ரகசிய கேமராக்கள் மூலம் படம்பிடிக்கப்படும் காட்சிகளை அதிக விலை கொடுத்து வாங்க ஏராளமான இணைய தளங்கள் இருக்கின்றன. இவர்கள் கொடுக்கும் பணத்துக்கு ஆசைப்பட்டுதான் பல இடங் களில் ரகசிய கேமராக்கள் வைக்கப் படுகின்றன. கேமரா வைக்கும் செலவைக்கூட அவர் களே ஏற்றுக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற ரகசிய கேமராக்கள், அகச்சிவப்பு கேமராக்களைக்கூட கண்டுபிடிக்கக்கூடிய கருவிகளும் சந்தையில் கிடைக்கின்றன.