சனி, 26 அக்டோபர், 2013

விரிவாக விடை அளிக்கும் முறையால் தேர்வெழுத நேரம் போதவில்லை: குரூப்1 தேர்வர்கள்

தற்போதைய தேர்வு முறையில், "அப்ஜக்டிவ்' முறையிலான கேள்விகள் இல்லை.
அனைத்து கேள்விகளும், விரிவாக விடை அளிக்கும் வகையில் இருப்பதால், தேர்வெழுத, நேரம் போதவில்லை' என, குரூப்1 தேர்வர்கள் புலம்பினர்.
 தமிழக அரசு தேர்வாணையம் மூலம், புதியபாடத்திட்டத்தின் அடிப்படையில், முதல் முறையாக, குரூப்1, மெயின் தேர்வு, சென்னையில் மட்டும், நேற்று, 14 மையங்களில் நடந்தது. டி.எஸ்.பி., துணை கலெக்டர்,மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில், காலியாகஉள்ள, 25 பணியிடங்களை நிரப்ப, நடந்த இத்தேர்வில், மாநிலம் முழுவதிலும் இருந்து, 1,372 பேர் பங்கேற்றனர்.
காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை,தேர்வு நடந்தது. திருவல்லிக்கேணி, என்.கே.டி., பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை,டி.என்.பி.எஸ்.சி., தலைவர், நவநீதகிருஷ்ணன், பார்வையிட்டார். என்.கே.டி., பள்ளியில், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, 100 தேர்வர்கள், தேர்வெழுதினர்.

 கோவையைச் சேர்ந்த, ரேஷ்மா கூறுகையில், ""நான், முதல் முறையாக, இப்போது தான், குரூப்1 தேர்வை எழுதினேன். முதல்நிலைத் தேர்வில் தேர்வு பெற்று, தற்போது,
மெயின் தேர்வை எழுதியுள்ளேன். கேள்விகள், கடுமையாக இல்லை. நன்றாக எழுதினேன்,'' என்றார். 
ஈரோட்டைச் சேர்ந்த, தினேஷ் கூறியதாவது: பழைய பாடத்திட்டத்தில், இரு தேர்வுகள் மட்டுமே நடக்கும். தற்போது, மூன்று தாள் தேர்வுகள் நடக்கின்றன. பழைய
பாடத்திட்டத்தில், முதல்தாள் தேர்வில், 40 கேள்விகளும், இரண்டாம் தாள் தேர்வில், 35 கேள்விகளும், "அப்ஜக்டிவ்' முறையில் இருக்கும். இதர கேள்விகள், விரிவாக விடை எழுதும் வகையில் இருக்கும். ஆனால், தற்போது, "அப்ஜக்டிவ்' முறையிலான கேள்விகள் கிடையாது.
அனைத்து கேள்விகளுமே, விரிவாக விடை எழுதும் வகையில் தான் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், விடை எழுத, போதிய நேரம் கிடைக்கவில்லை. பாடத்திட்டத்திற்கு உட்பட்டு தான், கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விகள், ஓரளவிற்கு நன்றாக இருந்தபோதும், விடை எழுத, நேரம் கிடைக்காதது தான் குறை. இவ்வாறு, தினேஷ் கூறினார்.

இதேபோல், பல தேர்வர்கள், நேரம் போதவில்லை என, தெரிவித்தனர். நேற்று, 300 மதிப்பெண்களுக்கு, தேர்வு நடந்தது. தொடர்ந்து, இன்றும், நாளையும், தலா, 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும். இந்த தேர்வில், அதிக மதிப்பெண் பெறுபவர்கள், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். பின், மெயின் தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண் (120 மதிப்பெண்) ஆகியவற்றின் அடிப்படையில்,
இறுதி தேர்வுப்பட்டியல் வெளியாகும். நவம்பர் இறுதிக்குள், இறுதி பட்டியலை எதிர்பார்க்கலாம்.



Source dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக