வியாழன், 31 அக்டோபர், 2013

ஆசிரியர் தகுதி தேர்வு  வழக்கில் டி.ஆர்.பி., தலைவருக்கு ரூ.5,000 அபராதம் 

ஆசிரியர் தகுதித்தேர்வு, கீ ஆன்சரில் தவறான
விடைகள் அளிக்கப்பட்டுள்ளதால், முழு மதிப்பெண் வழங்க
தாக்கலான வழக்கில், அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல்
செய்யாததால், டி.ஆர்.பி., தலைவர் விபு நய்யாருக்கு,
5,000 ரூபாய் அபராதம் விதித்து, மதுரை ஐகோர்ட்
கிளை உத்தரவிட்டது. 
விக்கிரமசிங்கபுரம் சூர்யா தாக்கல் செய்த மனு:
எம்.எஸ்.சி., - பி.எட்., படித்துள்ளேன். டி.ஆர்.பி., மூலம்,
2012ல், பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில், எனக்கு,
பி வரிசை வினாத்தாள் வினியோகித்தனர். டி.ஆர்.பி.,
இணையதளத்தில் வெளியான கீ ஆன்சரில்,
ஒன்பது கேள்விகளுக்கு, தவறான விடைகள் இடம்பெற்றன. 
அவற்றிற்கு நான், சரியான விடைகளை எழுதியுள்ளேன்.
எனக்கு, 86 மதிப்பெண் வழங்கியுள்ளனர். தேர்ச்சி பெற, 90
மதிப்பெண் வேண்டும். கீ ஆன்சர் தவறாக உள்ளதால்,
எனக்கு கூடுதலாக, ஒன்பது மதிப்பெண் வழங்க
உத்தரவிட வேண்டும். இதனால், என், கட்-ஆப் மதிப்பெண்
உயரும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டார். நீதிபதி, எஸ்.நாகமுத்து 
முன், மனு விசாரணைக்கு வந்தது. 
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இவ்வழக்கு, ஓராண்டாக
நிலுவையில் உள்ளது. பலமுறை விசாரணைக்கு வந்தும்,
டி.ஆர்.பி., தலைவர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை.
அரசுத் தரப்பிற்கு, கால அவகாசம் அளித்தும், நடவடிக்கை இல்லை. 
இதனால், மனுதாரர் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். 
டி.ஆர்.பி., தலைவருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கிறேன். அவர்,
தொகையை மனுதாரருக்கு வழங்க வேண்டும். விசாரணை, நவ., 11க்கு 
ஒத்தி வைக்கப்படுகிறது. 
இவ்வாறு, அவர் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக