வியாழன், 26 டிசம்பர், 2013

அரசு,அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சிப்பள்ளிகளில் ஆலோசனை பெட்டி



அரசு,அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சிப்பள்ளிகளில் ஜன., முதல், குழந்தைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில்,பாதுகாப்பு ஆலோசனை பெட்டி வைக்கப்பட உள்ளது.
வீட்டை விட்டு வெளியேறிய குழந்தைகள், கல்வி,மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள், பள்ளி, வீடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் குறித்து "சைல்டு லைன்' 1098க்கு, நவம்பரில் 104 பேர் அழைத்தனர்.இதில் 34 அழைப்புகளுக்கான பிரச்னைகள்
சரிசெய்யப்பட்டுள்ளது. இரு குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மற்ற அழைப்புகளுக்கான விசாரணைகள் தொடர்ந்து வருகின்றன. பாலியல் தொல்லை குறித்த,
பிரச்னைகள் எதுவும் வரவில்லை.குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் ஜிம் ஜேசுதாஸ்
கூறியதாவது:
 உடல், மனரீதியாக குழந்தைகள் துன்புறுத்தப்பட்டால், 1098க்கு போன் செய்யலாம். நலக் குழுமம் சார்பில், மதுரை காக்கைபாடினியார் மேல்நிலைப் பள்ளியில்,
குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை பெட்டி அமைக்கப்பட்டது. குறிப்பாக பெண் குழந்தைகள், திடீரென ஒரு வாரம் வரை பள்ளிக்கு வராமல் இருந்தால், உடனடியாக கண்காணிக்க வேண்டும். குழந்தைத் திருமணமோ, கடத்தலோ, அல்லது வேலைக்கோ அனுப்பப்பட்டிருக்கலாம். மாணவர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்களும் இம்முறையை பயன்படுத்தினால், கடைசிநேர பிரச்னையை தவிர்த்து, ஆரம்பத்திலேயே தீர்வு காணலாம். கல்வி, பொருளாதார ரீதியான பிரச்னைகள், மனநல ஆலோசனைகளும் வழங்கப்படும். கலெக்டர் சுப்ரமணியன் உத்தரவின் பேரில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் ஆலோசனை பெட்டி, வரும் ஜனவரி முதல் அமைக்கப்படும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக