ஞாயிறு, 22 டிசம்பர், 2013

அறிவியலை அறிமுகம் செய்வோம்


 இன்று, பொதுத் துறை நிறுவனங்கள், புகழ்மிக்க இலக்கியவாதிகள்,
படைப்பிலக்கியவாதி,கவிஞர்கள்,அரசியல் பிரமுகர்கள் என
வெவ்வேறு தளங்களில் இயங்குவோரும் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த
கருத்துக்கள், விவாதங்கள், சர்ச்சைகள், கருத்தாடல்களில் ஈடுபடுன்றனர்.
இது ஓர் ஆரோக்கியமான விஷயம்தான். இவர்களை, அறிவியல் பேசுபவர்கள்
என்று கூறுவதை விட அறிவியல் பற்றிப் பேசுபவர்கள்என்று கூறலாம். அதிலும் அறிவியல் சிந்தனைகளையும், அறிவியல் பாடங்களையம் இஷ்டத்துக்குப் போட்டு பல சமயங்களில் குழப்பிக்கொள்வார்கள்.
 அறிவியல் என்பது அறிவார்ந்த சிந்தனைகளின் அலசல் மட்டுமே. அறிவியலாரஇயற்கையில் இருந்தோ அல்லது திரட்டப்பட்ட நடைமுறைத் தகவல்களில்
இருந்தோ தரவுகள் (டேட்டா) சேகரிப்பர். அவற்றின் அடிப்படையில்
கருத்தாக்கம் (கான்செப்ட்) உருவாகும். அவற்றை பரிசோதனைகள் (எக்ஸ்பெரிமென்ட்) வழி நிரூபிக்க முயல்வர்.அவை நூற்றுக்கு நூறு சரியாக அமையவேண்டும் என்பதில்லை.
பத்து மாதிரிகளில் ஆறு மாதிரிகள் தேறினாலே போதும் அவை சோதனைகள் வழி நிரூபணம் ஆனபின், மீண்டும் சில விதிகள வரையறுக்கப்படும். விதிகளுக்கு உள்பட்ட நிகழ்வுகள் உதாரணங்கள் ஆகும் புறம்பானவை "விதி விலக்குகள்' ஆகும். விதிகளுக்கு உள்பட்ட நிகழ்வுகள அடிப்படையில் கோட்பாடு (தியரி) வகுக்கப்படும். அதற்கும் சில
கட்டுப்பாடுகள் உண்டு. கன அளவு மாறாத ஒரு பாத்திரத்தில் நிறைத்த வாயுவைச் சூடாக்கினால வாயுவின் அழுத்தம் அதிகரிக்கும் என்பது சார்லஸ் விதி. அதற்காக சூரிய உள்ளகத்தின் பல லட்சம் பாகை வெப்ப நிலை ஊட்டினால் சார்லஸ்
விதி தவிடுபொடி. அதனால் வாயுக்களின் கோட்பாடு அவ்வப்போது ராபர்ட்
பாயில், சார்லஸ், அவகாட்ரோ, வாண்டர் வால்ஸ் போன்றோராலேயே திருத்தப்பட்டு வந்து இருக்கிறது.
 இந்த அறிவியல் தத்துவார்த்தம் ஆனது. அதனை ஏதேனும் ஒரு பொருள்
வடிவத்தாலேயே எடுத்துக்காட்டி விளக்க நேரும். ஒரே அறிவியல் கொள்கை பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்கும்.வானில் பறப்பதற்றகு இயற்கை போதும் என்று தேதாலஸ் என்ற கிரேக்கத் தச்சன் மெழுகு பூசி மூங்கில் முறத்தைக் கட்டி பறக்க முற்பட்டானாம். காற்றில உயர்வதற்கு அந்தத் தொழில்நுட்பம் போதும். இகாரஸ் என்னும் தன்மகனையும் இதே மாதிரி வானவெளிக்கு அழைத்துச் சென்றான். ஆனால்
சூரியன் பக்கத்தில் பறந்தபோது மெழுகு உருகி தட்டியில் ஓட்டை விழுந்து இறக்கை பழுதானது. ஆகாயத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தான் என்றொரு தொன்மம் வழக்கில் உண்டு. அது மட்டுமல்ல, ஐம்பது பறவைகளின் கால்கலில் கயிற்றைக்கட்டி, அதில் ஒரு இருக்கையைக் கட்டி வானில் எம்பி உயரலாம் என்று பிரான்சிஸ் காட்வின்
போன்றோர் சிந்தித்தனர்.
 ஒளிவில்லை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அதன் உதவியால் சூரிய ஒளியைக குவித்து வெப்பப் புள்ளி உண்டாக்கி, அதன்வழி காற்றைச்சூடாக்கி ஒரு கலத்தினால் பறக்கலாம் என்று சைரானோ-சி-பெர்ஜெராக போன்றோர் புனைகதைகள் தீட்டினர். ஏன், காந்தம் அறிமுகம் ஆன பிறகு, பிரம்மாண்டமான ஒரு காந்தத்தின் வடதுருவத் தகட்டில் அமர்ந்து கொண்டு, அதற்கு அடியில் இன்னொரு வடதுருவத்தை வைத்தால் தகடு தெறித்து வானில் பறக்கும்.இது ஜோனத்தான் ஸ்விஃப்ட் எழுதிய கலிவர் பயணக் கதை.

"லாபுத்தா' என்பது அந்தப் பறக்கும் தீவின் பெயர். 700 பீப்பாய்களில் வெடிமருந்து நிறைத்து அதன் வெடிவேகத்தில் நிலாவுக்குப் போகலாம் என்றும் கருதினார் முர்தாக் மக் தெர்மோ. 1728 ஆம் ஆண்டு அவர் எழுதிய சந்திரப் பயணம் பற்றிய நூல் ஒன்றில் வெடிமருந்து ஏவுகலன் குறித்த முதல் சிந்தனை துளிர்விட்டது. ஒரு ராட்சதப் பீரங்கி உதவியால் சந்திரனுக்கு விண்கலன் அனுப்பலாம் என்கிற கருத்தாக்கமும் ஜூலி வெர்னி நாவலில் இடம்பெற்றது. சாதாரண துப்பாக்கியினால் ஒரு குண்டினைத் தொலைதூரத்துக்கு அனுப்ப இயலும் என்றால் மிகப் பெரிய துப்பாக்கியினால் சந்திரனுக்கே விண்கலனஒன்றினை செலுத்தலாமே. அதுவும் சரிதான். விண்வெளித்தூப்பாக்கி  என்பது விண்கலன். ஏவுமேடை போன்றது. எதார்த்த அறிவியல் கற்பனை. ஒரு புனைத்தன்மையிலும் ஒரு நேர்த்தியான அறிவியல் துல்லியம் இருக்கத்தான் செய்கிறது. 

கம்பராமாயணத்திலும் இராவணனின் " தேர் சென்ற சுவடெல்லாம்
மாய்ந்து விண்ணில் ஓங்கிய' நிலை சித்தரிக்கப்படுகிறது. மகரிஷி எழுதிய
"வைமானிக சாஸ்திரிக' என்ற நூலில் இத்தகைய விமானவியல் கருத்தாக்கங்கள்
உள்ளன. ஏமாங்கத நாட்டின் இராசமாபுரத்தில் உதித்தவன் சச்சந்தன் எனும் அரசன்.
கர்ப்பம் உற்ற மனைவி விசயையை மயிற்பொறியில் ஏற்றித் தப்பிக்கச்
செய்கிறான். "பல்கிழியும், பயினும், துகில் நூலொடு நல்அரக்கும், மெழுகும், நலம் சான்றன அல்லனவும் அமைந்(து) ஆங்(கு) எழு நாளிடை செல்வதொர் மாமயில் செய்தனன் அன்றே (235) இதில் துணி, பயின் (பிசின் ) நூல்,
அரக்கு போன்றவற்றால் குழைத்துத் தயாரிக்கப்பட்ட மயிற்பொறி அது.
ஏழே நாளில் செய்து முடிக்கப்பட்டதாம். அன்றைய இழை வலுவூட்டிய
கோவைப்பொருள் தொழில்நுட்பம் வெகு நேர்த்தியாகப் பதிவாகி இருக்கிறது. இது குறித்தநூல் இன்று நம்மிடம் இல்லை.
 மேலும் மன்னன் சச்சந்தன் அதனை இயக்கவும் மனைவி விசயையைக்குக் கற்றுக்
கொடுத்தான். உள்ளபடியே அந்த மயிற் "பொறி வலம்திரிப்ப'  வானில் மேகத்திடை எழுந்து உயர்ந்து பறக்கும் என்றும், "இடம்
திரிப்ப' டவர் மருள வீழ்ந்து கால் குவித்து இருக்கும்" (239) என்றும் விவரிக்கிறார் திருத்தக்கத் தேவர். இன்றைய இயந்திரத் திருகுத் தொழில்நுட்பம் இதுவாகும். ஆதலால் தொழில்நுட்பம் என்பது ஒரு பொருளினை அல்லது வடிவத்தினைச் சீர்திருத்தும் முயற்சியே. அறிவியல் விதிகளின்படி புதிய தொழில்நுட்பங்கள் பிறக்கின்றன. அவற்றை மேம்படுத்தும் தொடர் முயற்சியில் மேலும் மலும் புதிய கண்டுபிடிப்புகள் அறிவியலிலும்,
தொழில்நுட்பத்திலும் நிகழ்கின்றன. அவ்வளவே. அந்தந்த காலத்திய அறிவியல் சிந்தனைகளை இலக்கியங்களில்பதிவு செய்வதும் பெருமைப்படுவதும் குற்றம் அல்ல. 

ஜூலி வெர்னியின் அறிவியல் புனைகதைப் படைப்பு ஹெர்மன் ஓபர்த் எனும் 11 வயது ஜெர்மானியச சிறுவனை பிற்காலத்தில் உலகப்புகழ் பெற்ற ஏவூர்தி நிபுணராக இனங்காட்ட வழி வகுத்தது. எச்.ஜி.வெல்ஸ் எழுதிய "சந்திரனில் முதல் மனிதர்கள் ( 1901) நூல் மிகவும் சுவாரஸ்யமானது. அதில் வரும் டாக்டர் பெட்ஃபோர்ட் என்னும் கதாபாத்திரம் ஒரு விசித்திரமான மனிதனைச சந்திக்கிறது. அந்த மனிதர் பெயர் காவர் அவர் சில இயற்பியல்
விதிகள் பற்றி பெட்ஃபோர்டிடம் பேசுகிறார். ஒளியைக் கடத்தக்கூடிய கண்ணாடி வெப்பத்தைக் கடத்தாப் பொருள் அல்லவா?
அதே வேளையில் வெப்பத்தைக் கடத்தும் ஒரு வண்ணக் கரைசல் ஒளியை உள்புக
விடாதே. அப்படியானால் நிறையீர்ப்பைக் கடத்தாத பொருள் ஒன்று ஏன்
இருக்கக் கூடாது என்று கேள்வி எழுப்புகிறார். ஒளிபுகாப் பொருள், அனல்
புகாப் பொருள் மாதிரியே நிரையீர்ப்புப் புகாப் பொருள் குறித்த சிந்தனை.
ஒரு விண்கூடு தயாரிக்கிறார். அது புவியீர்ப்புக்குக் கட்டுப்படாமல் விண்வெளியில் பறந்து சந்திரனுக்குச் செல்வதாகக் கதை இந்தப் புனைகதைகள் யார் யாரை எப்படியெல்லாம் பாதித்தனவோ, ஆனால் மாச்சூசெடஸ் மாகாணத்தில் மாப்பிள் குன்றின் பின்புறம் வொர்செஸ்டரகிராமத்திலிருந்த ஒரு சிறுவனை என்னவெல்லாமோ பண்ணிற்று. ராபர்ட்
ஹூச்சிங் கொட்டார்டு என்கிற அந்த செவ்வாய்க் கிரகத்துக்குப் பயணம்
செய்யத் தன்னிடம் மட்டும் ஒரு வாகனம் இருந்தால் எப்படி இருக்கும்
என்று ஏங்கினார். செவ்வாய்த் தரையில் இருந்து நோக்கினால் இந்தப் பூமி மிகச் சிறியதாகத் தோன்றுமோ என்னவோ என்று யோசித்தார். அவரது நாள்குறிப்பில் மேலும் சில சுவையான செய்திகள். 1915 ஜூலை 15அன்று எழுதிய குறிப்பு- எச்.ஜி. வெல்ஸின் "சந்திரனில் முதல் மனிதன்'  புதினத்தை மறுபடி புரட்டிப் பார்த்தார்.ஆகஸ்டு 8ஆம் தேதி தானே சந்திரப் பயணம் செய்ததா கனவுவேறு கண்டாராம். மீண்டும் தனது தொலைநோக்கி வழியாக அழகான சந்திரனையே உற்றுக்கவனித்துக் கொண்டிருந்தார். அவர் ஏவுகலனை 56 மீட்டர் உயரம்வரை செலுத்திக்காட்டினார். அபாரம். கல்லூரி செல்லுமுன்,பள்ளி மாணவர்களிடமே இத்தகைய அறிவியல் சிந்தனைகளை ஆரம்பகட்ட
அறிவியலாக அறிமுகம் செய்வது மிகுந்த நன்மை பயக்கும். 

கட்டுரையாளர்:  S. MUTHU இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக