செவ்வாய், 28 ஜனவரி, 2014

6,275 மின் வாரிய ஊழியர் நேர்காணல் முடிவு: பிப்., முதல் வாரம் வெளியாக வாய்ப்பு


மின் வாரியத்தில், புதிதாக, 6,275 ஊழியர்களை நியமிப்பதற்காக நேர்காணல் நடத்தப்பட்டது.இதன் முடிவுகள், அடுத்த மாதம், முதல் வாரத்தில் வெளியாகும் என, தெரிகிறது.
மின்சார வாரியத்தில், தொழில்நுட்ப உதவியாளர், உதவி பொறியாளர் என, 80 ஆயிரம் பேர்
பணியாற்றுகின்றனர்; 25 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மின் உற்பத்தி,வினியோகம், கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதையடுத்து, புதிதாக, 4,000 கள உதவியாளர்; 1,000 கணக்கீட்டாளர்; 1,000 தொழில்நுட்ப உதவியாளர்; 275உதவி பொறியாளர் என, 6,275 பணியிடங்களை நிரப்ப, முடிவு செய்யப்பட்டது. இதற்காக, ஒரு பதவிக்கு,ஐந்து நபர் என்ற அடிப்படையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பணி மூப்பு பட்டியல் பெறப்பட்டு, அதன்படி,
தகுதியான நபருக்கு, கடந்த அக்டோபரில், அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.

சென்னை, திருச்சி, மதுரை,கோவை, சேலம் உள்ளிட்ட, 15 மையங்களில், நவம்பரில், பல கட்டங்களாக நேர்காணல் நடந்தது. இதில், 15ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். சென்னை தவிர்த்து, மற்ற மையங்களில், நேர்காணலில் பங்கேற்றவர்களின் விவரம் மற்றும் மதிப்பெண், சென்னை,மின்சார வாரிய தலைமை அலுவலகத்திற்கு, கடந்த மாதம் அனுப்பப்பட்டது. தற்போது, மின்சார வாரியஅலுவலகத்தில், நேர்காணல் முடிவுகளை, இறுதி செய்யும் பணி, 90 சதவீதம் முடிவடைந்து விட்டது. வரும்பிப்ரவரி, முதல் அல்லது இரண்டாவது வாரத்தில், நேர்காணல் முடிவுகளை வெளியிட, மின் வாரியம்
முடிவு செய்துள்ளது. 
இது குறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது; நேர்காணல் முடிவுகளை, இம்மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டோம். சில காரணங்களால், வெளியிடுவதில் தாமதமானது. பிப்ரவரி,இரண்டாவது வாரத்தில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சட்டசபை கூட்டத்தொடர், 30ம்தேதி துவங்குகிறது. இது, எத்தனை நாட்களுக்கு நடக்கும் என, தெரியாது. இதனால்,முடிவு வெளியிடுவதில், தாமதம் ஆனாலும் ஆகலாம். இருப்பினும், லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக