எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத் தேர்வு முடிவு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.

தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து படித்தவர்களில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 41 பேர் மாநிலத்தில் பெற்றுள்ளனர். 500-க்கு 498 மதிப்பெண் பெற்று 192 பேர் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று 540 மாணவர்கள் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளி சாதனை:

முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் 19 பேர் அரசுப் பள்ளி மாணவர்கள். இவர்களில் 3 பேர் மாநிலத்தில் முதலிடம், 6 பேர் மாநிலத்தில் இரண்டாம் இடம், 10 பேர் மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.

பிறமொழியை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தவர்களில் 500-க்கு 500 பெற்று 5 மாணவர்கள் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.

மொத்த தேர்ச்சி விகிதம் 92.9%

மொத்த தேர்ச்சி விகிதம் 92.9%. இதில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம்: 90.5% | மாணவிகள் தேர்ச்சி விகிதம்: 95.4% ஆகும். வழக்கம் போல் மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகமாகவுள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது மொத்த தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 90.7% ஆக இருந்தது.

பாடவாரியாக முழு மதிப்பெண்:

கணிதப் பாடத்தில் 27,134 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 1,15,853 பேர் 100-க்கு 100 பெற்றனர். சமூக அறிவியலில் 51,629 பேர் 100-க்கு 100 பேர் பெற்றுள்ளனர்.

அரசு தேர்வுத் துறையின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சென்னை கல்லூரிச் சாலை டிபிஐ வளாகத்தில் தேர்வுத் துறையின் இயக்குநர் கே.தேவராஜன் தேர்வு முடிவுகளையும், மாநில அளவில் ரேங்க் பெற்றவர்களின் பட்டியலையும் வெளியிட்டார்.

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு கடந்த மார்ச் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை 5 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள், 5 லட்சத்து 32 ஆயிரம் மாணவிகள் மற்றும், தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் உள்ளிட்ட மொத்தம் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் எழுதியுள்ளனர்.

இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.

தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதளங்களில் மதிப்பெண் விவரங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

www.tnresults.nic.in / www.dge.tn.nic.in

www.dge1.tn.nic.in / www.dge2.tn.nic.in

www.dge3.tn.nic.in

பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்று தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது.

மே 22 முதல் 27-ம் தேதி வரை மாணவர்கள் தங்கள் பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையத்தின் மூலமாகவும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு தாள்கள் (மொழிப்பாடம், ஆங்கிலம்) கொண்ட பாடத்துக்கு கட்டணம் ரூ.305, ஒரு தாள் கொண்ட பாடத்துக்கு (கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) ரூ.205.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது ஒப்புகைச்சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத் தித்தான் மறுகூட்டல் முடிவுகளை அறிய முடியும்.

பள்ளி தலைமை ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மே 29 முதல் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியரிடம் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம்.

பள்ளி மாணவர்களும், தனித்தேர்வர் களும் தேவைப்பட்டால் ஜூன் 4 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தாங்களே தேர்வுத்துறை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் தெரிவித்துள்ளார்.