வியாழன், 16 ஜனவரி, 2014

திருவள்ளுவர் தினம்: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் கவிஞர் வைரமுத்து கோரிக்கை


 திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டுமென்று கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார். 
திருவள்ளுவர் தினம்
 திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட்நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு வெற்றித்தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அவர் பேசியதாவது:- “திருக்குறளை கொண்டாடுவது என்பது தமிழர்களின் காலக்கடமையாகும். தமிழர்களுக்கு நில அடையாளம் உண்டு மொழி அடையாளம் உண்டு கலை அடையாளம் உண்டு தத்துவ அடையாளம் உண்டா என்று கேட்டால் திருவள்ளுவரை உயர்த்தி பிடிக்கலாம். அறிவுலகம் தலை சிறந்த சமூக அரசியல் நூல்களாக மூன்றை கருதுகிறது. கவுடில்யரின் “அர்த்த சாஸ்திரம்” மாக்கிய வல்லியின் “தி பிரின்ஸ்” மற்றும் திருவள்ளுவரின் “திருக்குறள்”. மற்ற இருநூல்களையும் நான் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. ஆனால் திருக்குறள் மானுட மேன்மையில் ஒரு படி உயர்ந்து நிற்கிறது. மற்ற இரண்டு நூல்களும் வாழ்வில் வெற்றி முக்கியம்; வெற்றிக்கான வழிமுறைகள் முக்கியமில்லை என்கின்றன. ஆனால், வெற்றியைப்போலவே அதை அடையும் வழியும் மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்கிறது திருக்குறள்.
 தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் 
புறவழியில் வருவதெல்லாம் இன்பம் அல்ல; அறவழியில் வருவது மட்டுமே இன்பம் என்று உலக நீதியை உரக்கச்சொல்கிறது திருக்குறள். ‘அறத்தான் வருவதே’ இன்பம் என்ற தத்துவத்திலிருந்து அது ஒருபோதும் பின்வாங்கியதில்லை. இந்த திருநாளில் மத்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். மதச்சார்பற்ற அரசின் கீழ் நாம் இயங்குகிறோம் மதச்சார்பற்ற அரசின் கீழ் நாம் ஆளப்படுகிறோம். அப்படியானால் மதச்சார்பற்ற ஒரு நூலைத்தான் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். அதற்கு திருக்குறளைப்போல் அரிய நூல் வேறொன்றுமில்லை. எனவே மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை இந்த கருத்தை கருதிப்பார்க்கவேண்டும். இந்தியாவின் தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும்.“ இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக