வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

சட்டசபையில் வேலைநிறுத்தம் குறித்து பேசிய போது அமைச்சர்கள் மவுனம்

அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக, கம்யூ.,- எம்.எல்.ஏ.,க்கள் பேசியதற்கு, அரசு தரப்பில் எந்தப் பதிலும் தெரிவிக்கப்படவில்லை.சட்டசபையில், மார்க்.கம்யூ., - எம்.எல்.ஏ., பாலபாரதி,
நேற்று பேசியதாவது:தேர்தல் வாக்குறுதிகள்அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக, முதல்வர்
தெரிவித்தார்; ஆனால், பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 'அரசு ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்துவோம்; ஊதிய
முரண்பாடுகளை களைவோம்' என, வாக்குறுதி அளித்தீர்கள்; அதை நிறைவேற்றவில்லை.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல சாதனைகள செய்ததாகக் கூறுகிறீர்கள். அதற்கு உதவிய அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு, செவி சாய்க்காமல் உள்ளீர்கள்; அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தால், தேர்தல் பணி பாதிக்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அரசு, அவர்களை அழைத்து பேசி, சுமுக தீர்வு காண வேண்டும்.இவ்வாறு பாலபாரதி பேசினார்.
இ.கம்யூ., - எம்.எல்.ஏ., குணசேகரன் பேசும்போது, ''கோரிக்கைகளை
வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்கள்,
மாற்றுத்திறனாளிகளை அழைத்து பேசி, சுமுக தீர்வு காண வேண்டும்,'' என்றார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எந்த குற்றச்சாட்டை கூறினாலும், உடனுக்குடன் குறுக்கிட்டு பேசிய
அமைச்சர்கள், அரசு ஊழியர் வேலைநிறுத்தம் குறித்து பேசிய போது, எந்த பதிலும் தெரிவிக்காமல் மவுனம் காத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக