செவ்வாய், 19 நவம்பர், 2013

தமிழக தேர்வுகள் மார்ச் 3ல் ஆரம்பம்?

சி.பி.எஸ்.., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள், மார்ச், 1ம் தேதியில் இருந்து நடைபெறும் என, சி.பி.எஸ்.., நேற்று, அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தமிழக பொது தேர்வுகள், மார்ச், 3ம் தேதியில் இருந்து, நடைபெறலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் உட்பட, அனைத்து வகுப்பிற்கும், அடுத்த மாதம், முதல் வாரத்தில் இருந்து, அரையாண்டு தேர்வு துவங்குகிறது. இதையடுத்து, பொது தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, தேர்வு துறை தீவிரமாக செய்து வருகின்றன.

கடந்த ஆண்டு, 10ம் வகுப்பு தேர்வை, 11 லட்சம் பேரும், பிளஸ் 2 தேர்வை, 8 லட்சம் பேரும் எழுதினர். இந்த ஆண்டு, 10ம் வகுப்பு மாணவர் எண்ணிக்கை, 11.50 லட்சமாகவும், பிளஸ் 2 மாணவர் எண்ணிக்கை, 8.50 லட்சமாகவும் உயரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, சரியான புள்ளி விவரம், டிசம்பர், 15ம் தேதிக்குள் தெரிந்துவிடும். மாவட்ட வாரியாக, பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் விவரங்களை பெறுவதற்காக, 11 வகையான தகவல்கள் அடங்கிய படிவம் பள்ளிகளுக்கு ஏற்கனவே விநியோகம்  செய்யப்பட்டன. இதில் கேட்கப்பட்ட தகவல்களை, பூர்த்தி செய்து, மாணவ, மாணவியர், ஆசிரியர்களிடம் ஒப்படைத்து விட்டனர்.இதைத்தொடர்ந்து, இந்த விவரங்கள் அனைத்தும், தேர்வு துறை இணைய தளத்தில், பதிவேற்றம் செய்யும் பணி, ஓரிரு நாளில் துவங்கும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.பொது தேர்வுகள், மார்ச், 3ம் தேதியில் (திங்கள் கிழமை) இருந்து துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுகள் தனித்தனியே நடைபெறும். வரும் ஆண்டில், இரு தேர்வுகளையும், ஒன்றாக நடத்துவது குறித்து, தேர்வு துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. மார்ச், 3ம் வாரத்திற்குள், இரு தேர்வுகளையும் நடத்தி முடிக்க, தேர்வு துறை திட்டமிட்டுள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, சி.பி.எஸ்.., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மார்ச், 1ம் தேதி முதல் நடைபெறும் என, அதிகாரப்பூர்வமாக நேற்று, அறிவிக்கப்பட்டது. தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடக ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய, சென்னை மண்டலத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வை, 1.75 லட்சம் பேரும், பிளஸ் 2 தேர்வை, 80 ஆயிரம் பேரும் எழுதுவர் என, சி.பி.எஸ்.., வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஆண்டை விட, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, 25 ஆயிரம் பேரும், பிளஸ் 2 தேர்வை, 10 ஆயிரம் பேரும் கூடுதலாக எழுதுகின்றனர். தமிழகத்தில், சி.பி.எஸ்.., பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக, அக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. முதலில், 240 பள்ளிகள் இருந்ததாகவும், தற்போது, பள்ளிகளின் எண்ணிக்கை, 300க்கும் அதிகமாக உயர்ந்திருப்பதாகவும் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சி.பி.எஸ்.., அறிவிப்பை தொடர்ந்து, தமிழக தேர்வு துறையும், பொது தேர்வு குறித்த அறிவிப்புகளை விரைவில் வெளியிடும் என, மாணவர் மற்றும் பெற்றோர் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக