சனி, 23 நவம்பர், 2013

அறிவுசார் தலைநகராக தமிழகம் மாறி வருகிறது முதல்–அமைச்சர் பேச்சு

இந்தியாவில் அறிவுசார் தலைநகரமாக தமிழகம் மாறிவருகிறது என்று சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
பட்டமளிப்பு விழா
அண்ணா பல்கலைக்கழகத்தின் 34–வது பட்டமளிப்பு விழா நேற்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது. கவர்னர் கே.ரோசய்யா தலைமை தாங்கி பட்டமளிப்பு விழாவை தொடங்கிவைத்தார். முதல்அமைச்சர் ஜெயலலிதா தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.என்ஜினீயரிங் உள்ளிட்ட பல படிப்புகளை முடித்த மாணவமாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். விழாவில் பி.. மாணவர் ஆதித்யா பண்ட்லா, பி.அதிபன், எஸ்.ஹரினி, ஸ்வேதா கிருஷ்ணகுமார் உள்பட 114 மாணவமாணவிகள் தங்கப்பதக்கம் பெற்றனர். அவர்களில் 25 பேருக்கு கவர்னர் பதக்கங்களை வழங்கினார்.690 பேர் பிஎச்.டி. என்ற ஆராய்ச்சி பட்டமும், 61 பேர் எம்.பில். பட்டமும் பெற்றனர்.பி.. உள்ளிட்ட இளநிலை பட்டங்களை 1 லட்சத்து 20 ஆயிரத்து 494 பேரும், 35 ஆயிரத்து 44 பேர் முதுநிலை பட்டங்களையும் பெற்றனர்.மொத்தத்தில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 289 பேருக்கு கவர்னர் கே.ரோசய்யா பட்டம் வழங்கினார்.
விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், உயர் கல்வித்துறை செயலாளர் அபூர்வா வர்மா, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.தாண்டவன், சென்னை மாநகராட்சியின் மேயர் சைதை துரைசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவுக்கு வந்தவர்களை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.ராஜாராம் வரவேற்று அறிக்கை படித்தார்.
முதல்–அமைச்சர்
விழாவில் முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய பட்டமளிப்பு விழா உரை வருமாறு:–
தமிழகத்தின் பெருமைக்குரிய நிறுவனமாக அண்ணா பல்கலைக்கழகம் திகழ்கிறது. தமிழ்நாடு நாட்டிலேயே முதன்மை மாநிலமாக மாறும் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்கள், இதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.2013–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தின் பிராந்திய மையங்களிலும், அதன் உறுப்பு கல்லூரிகளிலும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் பெருமைமிகு நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்த தலைசிறந்த நிறுவனத்திலிருந்து நீங்கள் பட்டம் பெற்றிருப்பது மாபெரும் சாதனை ஆகும்.
அண்ணா பல்கலைக்கழக வரலாறு
1794–ம் ஆண்டு மே மாதம், ‘‘சர்வே பள்ளி’’யாக தொடங்கப்பட்ட இந்த பொறியியல் கல்லூரி, பிரிட்டிஷ் இந்திய கல்வி நிறுவனங்களில் மிகச்சிறந்தவற்றில் ஒன்றாக இன்று விளங்குகிறது.மேலும், இந்தியாவில் உள்ள பாரம்பரியமிக்க தொழில் பயிற்சி பள்ளிகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. புனித ஜார்ஜ் கோட்டை தலைமையகத்தில், வான ஆராய்ச்சியாளராகவும், புவியியல் மற்றும் கடல் சார்ந்த அளவராகவும் இருந்த மைக்கேல் டாப்பிங் என்பவர் இந்நிறுவனத்தை தொடங்கினார். 1858–ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் பெயர் ‘‘சிவில் பொறியியல் பள்ளி’’ என மாற்றப்பட்டது. நாட்டிலேயே இந்த கல்லூரிதான் முதன் முறையாக எந்திரவியல் பொறியியல் துறையில் பட்டம் வழங்கியது.
மாணவர்களுக்கு சமூக பொறுப்பு
இன்று பட்டம் பெறும் மாணவர்களாகிய உங்களுக்கு சமூக பொறுப்பும் உள்ளது. அந்த பொறுப்பை நீங்கள் தட்டிக்கழிக்க முடியாது. உங்களை சுற்றியுள்ள சமூகத்திற்கும், உங்களை ஆளாக்கிய நிறுவனங்களுக்கும், தமிழகத்திற்கும், நாட்டுக்கும் நீங்கள் கணிசமாக சேவையாற்ற வேண்டும். நாட்டை வலுப்படுத்தும் பணி உங்களுக்கு இன்று தொடங்குகிறது. மாற்றத்தின் தூதர்களாக நீங்கள் மாறுவதை நான் கண்காணித்து வருவேன். தமிழ்நாடு, நாட்டிலேயே முதன்மை மாநிலமாக ஆகும் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. உங்கள் அனைவருக்கும் இதில் பங்கு உண்டு.
தமிழ்நாடு அறிவுசார் தலைநகராக மாறி வருகிறது
தமிழ்நாடு புதுமையின் மையமாகவும், நாட்டின் அறிவுசார் தலைநகரமாகவும் மாறி வருகிறது. இதற்காக எனது அரசு பல்வேறு திட்டங்களை தொடங்கியுள்ளது. அவற்றில் சிலவற்றை நான் இங்கு குறிப்பிடுகிறேன். பல்கலைக்கழகம் வர்த்தக ஒத்துழைப்பு மையத்தை அமைத்த,. தொழில் நுட்பங்களை கண்டறிந்து, அவற்றை பகிர்ந்து கொள்ளும் மையங்கள் ஏற்படுத்தியது, உயர்ரக சோதனை கூடங்களுடன் பல்கலைக்கழகங்களில் பட்ட மேற்படிப்பு, உயர் கல்வி மையங்களை அமைத்தது, மாணவர்களுக்கு நிர்வாகத்திறனையும், வேலைவாய்ப்புக்கான தகுதிகளையும் அளிக்கும் வகையில் திறன் பயிற்சி மையங்களை அமைத்தது.
மடிக்கணினி
செய்தி மற்றும் தொழில்நுட்ப தகவல் மையத்தை அமைத்தது, மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி மையங்களை அமைத்தது, மகளிருக்கான சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையங்களை தொடங்கியது, சுற்றுலா மற்றும் ஓட்டல் நிர்வாக மையத்தை ஏற்படுத்தியது, தமிழ்வழியில் கணினி மையங்களை உருவாக்கியது, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்தது, பாலிடெக்னிக் கல்லூரிகள் மூலம் சமுதாய வளர்ச்சிக்கு வழிகண்டது என எனது அரசு உயர்கல்விக்கு மிகுந்த முன்னுரிமை அளித்துள்ளது, மாணவர்கள் தங்கள் படிப்பை பூர்த்தி செய்ய தேவையான அனைத்து ஊக்குவிப்புகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்குவது, மடிக்கணினி உள்ளிட்ட கல்வி சார்ந்த சாதனங்களை வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.
ரூ.150 கோடியில் உள்கட்டமைப்பு வசதி
2013 ஏப்ரல் மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தின் பிராந்திய மையங்கள் மற்றும் உறுப்பு கல்லூரிகளின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கிராமப்புற மாணவர்களின் தேவையை நிறைவேற்றும் வகையில், 4 புதிய அரசு பொறியியல் கல்லூரிகளை தொடங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
அவை தற்போது செயல்படத்தொடங்கியுள்ளன. சமூகத்தில் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொண்டுவர உயர்கல்வி முக்கிய பங்காற்றுகிறது. தற்போதுள்ள சவால்களையும், எதிர்காலத்தில் எழக்கூடிய பிரச்சினைகளையும் சமாளிக்க, கல்வி அறிவுதான் நமக்கு உதவி செய்யும். இந்த சவால்கள் சுற்றுச்சூழலாக இருக்கலாம், சுகாதாரமாக இருக்கலாம் அல்லது உணவு பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். உயர்கல்வி மேம்பாடு என்பது எனது அரசின் செயல் திட்டங்களில் முதலாவதாக உள்ளது.இதன்படி, கல்வி பணியை விரிவாக்குவது, புதிதாக மாணவர்களை சேர்ப்பது, திறமையை அதிகரிப்பது ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மனிதவளத்தை மேம்பாடு அடையச்செய்ய எனது அரசு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இனிமேலும் தொடர்ந்து மேற்கொள்ளும்.இங்கு பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.இவ்வாறு முதல் அமைச்சர் பேசினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக