புதன், 20 நவம்பர், 2013

அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் 499 ஆசிரியர்கள் பணியில் நீடிக்க கூடாது பள்ளி கல்வித்துறை உத்தரவு

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் 15–ந் தேதிக்கு பின்னர் சேர்ந்த 499 ஆசிரியர்கள் பணியில் நீடிக்கக்கூடாது என்று பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளிகள்
தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகள், அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் என்று 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள்.
கல்வித்தரம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக 14 வயது வரை உள்ள மாணவமாணவிகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், ஆசிரியர் தகுதி தேர்வை அந்தந்த மாநில அரசுகள் நடத்த வேண்டும் என்றும் 2009–ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதை தமிழக அரசு கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் 15–ந் தேதி முதல் அமல்படுத்தி வருகிறது.
நியமனம் செல்லாது
அதன்படி 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் 11–ந் தேதிக்கு பின்னர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதி தேர்வில் வெற்றி பெறாதவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருந்தால் அந்த நியமனம் செல்லாது என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ளதால் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியில் தான் சேருகிறார்கள். அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர யாரும் முன்வருவதில்லை.
நீடிக்கக்கூடாது
இந்த நிலையில் 2011–ம் ஆண்டு நவம்பர் 15–ந் தேதிக்கு பின்னர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் நியமனம் செல்லத்தக்கது அல்ல. இருப்பினும் மாணவர்கள் நலன் கருதி அவர்களுக்கு விதி விலக்கு அளிக்கலாமா என்று பள்ளி கல்வித்துறை ஆலோசித்தது.
ஆனால் அதற்கு வழி வகுக்காமல் 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் 15–ந் தேதிக்கு பின்னர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி செல்லத்தக்கது அல்ல என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து நீதிமன்ற முடிவை ஏற்று பள்ளி கல்வித்துறை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.
அதில் 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் 15–ந் தேதிக்கு பின்னர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் 499 ஆசிரியர்கள் பணியில் நீடிக்கக்கூடாது என்று கூறி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக