சனி, 16 நவம்பர், 2013

காலியாக உள்ள பல ஆயிரம் பேராசிரியர் பணியிடங்கள் தமிழக உயர் கல்வியின் தரம் குறைந்து விடும் அபாயம்

சட்டசபையில் அறிவித்து பல மாதங்களாகியும், பல ஆயிரம் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், தமிழக கல்லூரி களில் கல்வித்தரம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும், உயர்கல்வித்துறை அல்லது யு.ஜி.சி., யின் தீவிர கண்காணிப்பு இல்லாத பல கல்லூரிகளில், குறைந்த கல்வித் தகுதியுள்ளவர்கள் பேராசிரியராக பணியாற்றி வருகின்றனர்.
தனியார் நிறுவன 'சர்வே':கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கல்வித்தரம் குறித்து, டில்லியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், சமீபத்தில், 'சர்வே' ஒன்றை எடுத்தது. அதில் பெரும்பாலான மாநிலங்களில், பேராசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன என, தெரிய வந்துள்ளது. பல கல்லூரிகளில், ஒப்பந்த முறையில் தான் பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர் என்ற அதிர்ச்சியான தகவலையும், அந்நிறுவனம் ெவளியிட்டுள்ளது.இந்த, சர்வேயின் படி, யு.ஜி.சி., விதிப்படி, சம்பளம் வழங்கும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை விட, ஒப்பந்த முறையில் சம்பளம் வழங்கும் கல்வி நிறுவனங்கள் தான் அதிகமாக உள்ளன.
*
ஒடிசா மாநிலத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள், 33 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறுகின்றனர்.
*
மணிப்பூரில், ஒப்பந்த முறையில், 8,000 ரூபாய் ஊதியத்துக்கு பல பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
*
மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா மற்றும் கோவா மாநிலங்களில் தற்காலிக பேராசிரியர்களே, அதிகம் பணியில் உள்ளனர். இவர்களுக்கு மாதம், 8,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
*
பஞ்சாப், அரியானா, இமாச்சல பிரதேசம் மற்றும் காஷ்மீர் மாநில பேராசிரியர்கள், 6,000 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர்.
*
தமிழகத்தில், 4,000 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.இவ்வாறு, நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஒப்பந்த முறையில், பேராசிரியர்கள் பணியாற்றி வருவதால், கல்வித்தரம் வெகுவாக தாழ்ந்து காணப்படுகிறது.மேலும் சில கல்லூரிகளில், அதே கல்லூரியில் படித்தவர்களே, பேராசிரியராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இவர்கள், போதிய அனுபவம் இல்லாமல், வகுப்புகளை எடுப்பதால், கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது.

841
பணியிடங்கள்:கடந்த மார்ச் மாதம், சட்டசபையில், உயர் கல்வி அமைச்சர் பழனியப்பன் , '2012 - 13ல், 51 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில், 299 புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்படும்; 841 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்' என, அறிவித்தார்.
தரம் குறையும் அபாயம்:அறிவித்து பல மாதங்களாகியும், இதுவரை பேராசிரியர் பணிஇடங்கள் நிரப்பப்படவில்லை. அரசு உதவி பெறும் கல்லூரிகளை பொறுத்தவரை, 3,120 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், இதுவரை, 1,000 பணியிடங்கள் கூட நிரப்பப் படவில்லை என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கல்லூரிகளில், போதிய பேராசிரியர்கள் இல்லாமல், வகுப்பு கள் நடத்தப்பட்டு, செமஸ்டர் தேர்வும் நடந்து வருகிறது. இதே நிலை நீடித்தால், தமிழக உயர் கல்வியின் தரம் மேலும் குறைந்து விடும் அபாயம் உள்ளது. பொறியியல் கல்லூரிகளிலும், இதே நிலை தான் காணப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக