வெள்ளி, 22 நவம்பர், 2013

பள்ளிக் கல்வித் துறையில் பதவி உயர்வு தாமதம் பிரச்னைக்கு விரைவில் தீர்வுகாண வேண்டும்

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 3625 பேரின் பணிமூப்பு பட்டியல் தயார் நிலையில் இருந்தும், பல மாதங்களாக பதவி உயர்வு அறிவிக்கப்படவில்லை. மாநில அளவில், 525 உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர், 1100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான பணிமூப்பு பட்டியலை, 1.1.2013ல் பள்ளிக் கல்வித்துறை தயாரித்தது. உயர்நிலை பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பாக, பட்டதாரி மற்றும் தமிழாசிரியருக்கு இடையே நிலவும் சில பிரச்னையால், கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால், முதுநிலை பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு அளிப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை. கடந்த மே மாதம் அறிவிக்க வேண்டிய இந்த பதவி உயர்வு, "என்ன காரணத்தால்' இதுவரை வெளியிடவில்லை என்ற குழப்பத்தில் ஆசிரியர்கள் உள்ளனர். இதில், பலர் ஓய்வு பெறும் நிலையை எட்டியுள்ளனர்.
 இப்பிரச்னை குறித்து தமிழ்நாடு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சங்க பொதுச் செயலாளர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது: பத்தாம் வகுப்பு தேர்வு நெருங்குகிறது. ஆனால், 525 உயர்நிலை பள்ளிகளில், தலைமையாசிரியர்கள் இல்லை. ஆசிரியர்களுக்குள் நிலவும் பிரச்னையை அதிகாரிகள் எளிதாக பேசி முடிவு எட்டலாம். அதேபோல், 2013ம் ஆண்டிற்கான, முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பட்டதாரி பதவி உயர்வு "பேனல்' தயார் நிலையில் இருந்தும், பதவி உயர்வு அறிவிப்பு இல்லை. இதனால், பலர் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 2014ம் ஆண்டிற்கான ஆசிரியர் பணிமூப்பு பட்டியல் தயாரிக்கும் பணியும் துவங்கிவிட்டது. மாணவர்கள் நலன், கல்வி முன்னேற்றம், தேர்ச்சி விகிதம் பாதிக்காமல் இருக்க கல்வித்துறை அதிகாரிகள் இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வுகாண வேண்டும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக