சனி, 17 அக்டோபர், 2015

அரசின் கொள்கையை அமல்படுத்தும்படி, அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட முடியாது'

அரசின் கொள்கையை அமல்படுத்தும்படி, அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கு
உத்தரவிட முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ளது, ஆரோக்கிய மாதா மெட்ரிக் மேல்நிலை பள்ளி.
இங்கு பணியாற்றிய, ஆசிரியை சொருபராணி என்பவர், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு
வழங்கப்படுவது போல், தங்களுக்கும் சம்பளம் வழங்க உத்தரவிட கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு
தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மெட்ரிக் பள்ளிகளுக்கான விதிமுறைகளின்படி, சம்பள விகிதத்தை நிர்ணயிக்கும்படி, பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. இதை
எதிர்த்து, பள்ளி நிர்வாகம் மேல்முறையீடு செய்தது.
மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல்,நீதிபதிகள் சிவஞானம், புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்துக்கு இணையாக, மாநில அரசு ஊழியர்களுக்கு
வழங்கப்படுவதில்லை. அப்படி இருக்கும் போது, மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு இணையாக, தனியார்பள்ளி ஊழியருக்கும் வழங்க வேண்டும் என, நிர்வாகத்தை அரசு வற்புறுத்த முடியாது. அவ்வாறு செய்தால், அந்த பள்ளிகளுக்கான அடிப்படை உரிமைகளை, 'சரண்டர்' செய்யும்படி, மறைமுகமாக வற்புறுத்துவது போலாகிவிடும்.உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, மெட்ரிக் பள்ளிகளுக்கான விதிமுறைகள் என்பது, சட்டப்பூர்வமானது அல்ல; நியாயமான கட்டுப்பாடுகளுடன், சுயமான விதிமுறைகளை, தனியார் நிறுவனங்கள் ஏற்படுத்தி கொள்ளலாம். அதனால், அரசின் கொள்கையை, நிர்வாகத்தில் பின்பற்றும்படி, அரசு உதவி பெறாத தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிட முடியாது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக