செவ்வாய், 20 மே, 2014

ஆசிரியர் கல்வியியல் (பி.எட். கல்லூரி) கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிகள்

ஆசிரியர் கல்வியியல் (பி.எட். கல்லூரி) கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிகள்

ஆசிரியர் கல்வியியல் (பி.எட். கல்லூரி) கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிகள் ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என தேசியஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ்பாண்டா கூறினார்.

மேலும் இந்தக் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டு அங்கீகாரம் வழங்கதேசிய ஆசிரியர் கல்வி ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்.ஈ.ஏ.ஏ.சி.) ஒன்றும் அமைக்கப்பட உள்ளது என்றும் அவர் கூறினார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும்"வேலைவாய்ப்பு மற்றும் ஆக்கப்பூர்வமான சமூகத்தை உருவாக்குவதற்கான
ஆராய்ச்சிகளை மேம்படுத்துதல்' என்ற தலைப்பிலான 3 நாள் மாநாடு சென்னையில் திங்கள்கிழமை தொடங்கியது .
இதில் சந்தோஷ் பாண்டா பேசியது: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 6 மாத காலத்துக்குள்ளாக ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான வழிகாட்டு நெறிகளை என்.சி.டி.இ. உருவாக்கி வருகிறது. இந்தப் பணி விரைவில் முடிக்கப்பட்டு, வருகின்ற ஜூன் மாதத்துக்குள்ளாக புதிய வழிகாட்டு நெறிகளுக்கு ஒப்புதலும் பெறப்பட்டுவிடும் என்ற
நம்பிக்கையும் உள்ளது. எனவே, ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான
புதிய வழிகாட்டு நெறிகள் ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வந்துவிடும். இந்த புதிய வழிகாட்டு நெறிகள் மூலம் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனங்களில்தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்யும் வகையில் தொடர் ஆய்வு மற்றும்
கண்காணிப்பு முறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது. புதிய கல்லூரிகள் தொடங்குவதற்கு விண்ணப்பிப்பது, அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் எந்த நிலையில் உள்ளன என்பதை அறிவது என அனைத்து விவரங்களும் மின் ஆளுமையின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன.இதன் மூலம் ஊழல் நடைபெறுவது தடுக்கப்படும்.

தேசிய அங்கீகார மையம்:ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்களை ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்கும் முறை இதுவரை என்.சி.டி.இ.-யிடம் இல்லை. எனவே, பல்கலைக்கழக மானியக்
குழுவின் (யுஜிசி) தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சிலுடன் (நாக்) புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு தேசிய ஆசிரியர் கல்வி ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்.ஈ.ஏ.ஏ.சி.) என்ற புதிய மையம் உருவாகக்ப்படும். வரும் 2015-16 கல்வியாண்டு முதல் இந்த புதிய மையம் மூலம் ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். மாநில அரசுகளுடன் இணைந்து அடுத்த ஓராண்டில் தேசிய ஆசிரியர் கல்வித் தகுதி திட்ட வடிவம் ஒன்று உருவாக்கப்படும் என்பதோடு, ஆசிரியர் தணிக்கை முறையும் அறிமுகப்படுத்தப்படும். அங்கன்வாடிகளுக்கு வருகிறது கட்டுப்பாடு:
அங்கன்வாடிகளை ஒழுங்குபடுத்தும் வகையிலும், அங்கு குழந்தைகளுக்கு சிறப்பான பயிற்சிகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையிலும் "குழந்தை பாதுகாப்பு மற்றும்
கல்வி (இசிசிஇ)' என்ற திட்டத்தை கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கைகள் மூலம் 2015-16 ஆம் கல்வியாண்டில் ஆசிரியர் கல்வியியல் கல்வியில் மிகப் பெரிய சீர்திருத்தம் ஏற்படும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக