திங்கள், 19 மே, 2014

காற்று வாங்குகிறது ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு

தகுதி தேர்வால், ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்புக்கு, அரசின் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், ஒதுக்கீடு இருந்தும் விண்ணப்பம் பெற ஆள் இல்லாமல்,
காற்று வாங்குகிறது.
தமிழக அரசின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில்
செயல்படும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஆசிரியர் கல்வி பட்டயப்
படிப்பு சான்றுகளை வழங்கி வருகின்றன. அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர, பிளஸ் 2 தகுதி மட்டுமே தேவை என்பதால், கடந்த காலங்களில் ஏராளமானோர்சேர்ந்தனர்.
எண்ணிக்கை குறைவு :
தற்போது, மத்திய அரசின் இலவச கட்டாய உரிமைச் சட்டத்தின் படி, எந்த ஆசிரியர்
பயிற்சி நிறுவனத்தில் படித்திருந்தாலும், கட்டாயமாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு நடத்தி,அதில் தேர்வானவர்களுக்கு மட்டுமே பணி ஆணை வழங்க வழிவகை செய்யப்பட்டது.அதனால், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது.தற்போதைய நடைமுறை மற்றும் அதிகபட்ச தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன அங்கீகாரம் ஆகியவற்றால்,ஆசிரியர் கல்வி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பதால் பயனில்லை, என்ற நிலை உருவாகி உள்ளது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில், அரசின் சார்பில், மாவட்ட ஆசிரியர்
கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதே போல், தனியார் கல்வி நிறுவனங்களில், 39 ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், பட்டயப்படிப்பு சான்று வழங்குவதாக கூறி அங்கீகாரம் பெற்றுள்ளன. கடந்த கல்வி ஆண்டில், ஏழு நிறுவனங்கள் மட்டுமே, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சியின்,தொடக்கக் கல்வி பட்டய படிப்புக்கான பயிற்சி வழங்கின. மற்ற நிறுவனங்கள், மாணவர்கள் சேராததால் மூடப்பட்டன. அதே போல், நடப்பு கல்வி ஆண்டில், 39 தனியார் நிறுவனத்தில், 11 நிறுவனங்கள் மட்டும் பயிற்சி வழங்க முன்வந்துள்ளன. இதற்கிடையே, அரசின் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில்,100 இடங்களில், 50 பொது பிரிவுக்கும், 45 இடங்கள் தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கும், ஐந்து இடங்கள் மலைவாழ் பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த கல்வி ஆண்டில், 100 இடங்களுக்கு,46 மாணவ, மாணவியர் மட்டுமே சேர்ந்து படித்தனர்.
வினியோகம் துவக்கம் : நடப்பு கல்வி ஆண்டில், விண்ணப்ப வினியோம் துவங்கிய இரண்டு நாளில், 14 விண்ணப்பம் மட்டுமே விற்பனையாகி உள்ளது. ஜூன், 2ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்பட்டாலும், ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு படிக்க மாணவரிடையே ஆர்வமில்லை.
பயிற்சி நிறுவன ஆசிரியர் கூறியதாவது: மாநிலம் முழுவதும், 570க்கும் மேற்பட்ட தனியார் ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்று இருந்தாலும், 60 சதவீத நிறுவனங்களே செயல்பாட்டில் உள்ளன. கடந்த, சில ஆண்டுகளாக, படிப்படியாக மாணவர் சேர்க்கை இல்லாததால், மற்றவை மூடப்பட்டது. ஆசிரியர் பணிக்கு, தகுதி தேர்வு நடத்தி ஆள்தேர்வு செய்வதால், தொடக்கக் கல்வி ஆசிரியர் பணிக்கு வரவிரும்புவதில்லை. தகுதி தேர்வு எழுதி தேர்வாக முடியும் என, நினைக்கும் மாணவர் மட்டுமே, விண்ணப்பம்
பெற்றுச் செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக