ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

புதிதாக பணியேற்கும் முதுகலையாசிரியர்களே...உங்களோடு ஒரு நிமிடம்



புதிதாக நியமனம் பெற்று இன்று பணியில் சேரும் முதுகலையாசிரியர்களே வணக்கம்.
கடந்த 2 வருட போராட்டத்திற்குப் பின் பல்வேறு வழக்குகளைத்தாண்டி, பல இரவு  நித்திரை இழந்து ஒரு வழியாக இன்று பணியேற்க இருக்கிறீர்கள். முதலில் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பள்ளிக்கல்வித்துறையில் பெரிய வகுப்புகளை (11,12 ) கையாளும் ஆசிரியர்கள் நாம். ஆனால் நமது ஊதியம், பதவி உயர்வு சார்ந்த பிரச்சனைகளையும், இந்த மேல்நிலைக்கல்வி ஆரம்பிக்கப்பட்ட வரலாறும் தங்களுக்கு தெரியுமா? இந்த மேல்நிலைப் பணித்தொகுதி என்னென்ன பிரச்சனைகளை சந்தித்து வருகிறது என தங்களுக்கு தெரியுமா? அதை தங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.
     1966 ம் ஆண்டு கோத்தாரி கல்விக்குழுவின் பரிந்துரையை இந்திய பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டதன் பேரில் தமிழகம் அரசு 1.7.1978 அன்று தமிழகத்தில் 10+2+3 முறையை அமல்படுத்தியது. அன்று சுமார் 750 பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது.  அதனால் கல்லூரிக்கு செல்ல முடியாத நிறைய கிராமப்புற மாணவர்கள் மேல்நிலைக் கல்வி பெறும் நிலை ஏற்பட்டது. முதுகலையாசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.675 நிர்ணயிக்கப்பட்டது. கல்லூரி ஆசிரியர்களை விட 25 ரூபாய் மட்டுமே குறைவு என்பதாலும்,  தங்கள் சொந்த ஊருக்கு அருகிலேயே பணி என்பதாலும் மேல்நிலைக் கல்வியில் பல முதுகலையாசிரியர்கள் ஆர்வத்துடன் பணியில் சேர்ந்தனர். கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பெடுப்பதைப் போல ஆர்வத்துடன் கற்பித்தனர்.
     இந்நிலையில் நமது பணித்தொகுதிக்கான பணிவிதிகள், தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி விதிகள் என்ற பெயரில் அரசாணை எண் 720, நாள்.28.04.1981 ன் படி வெளியிடப்பட்டது. மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு 10 ஆண்டு ஆசிரியப்பணி அனுபவம் நிர்ணயிக்கப்பட்டது. பணியில் சேரும் போது எந்த முதுகலையாசிரியர் 10 ஆண்டு ஆசிரியப் பணியை முடித்திருப்பார்? அதனால் 10 ஆண்டு ஆசிரியப் பணி முடித்த பட்டதாரி ஆசிரியருக்கே மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணி வழங்கப்பட்டது. 1988 ல் நமது முதுகலையாசிரியர்கள் 10 ஆண்டு பணியை முடித்திருந்தனர். பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப்பின் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியில் 7 காலிப்பணியிடங்களில்      2 : 5 என்ற விகிதத்தில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலையாசிரியர்களை நியமிக்கலாம் என அரசாணை எண் 1620. நாள் 18.10.1988 ன் படி மேற்காண் அரசாணை 720ன் விதி 2( b)(1) ல்  திருத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் பயிற்சி வழங்கப்பட்டு முதுகலையாசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.  அவர்களும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் பங்கு கேட்க, மேற்காண் விகிதம் 2 : 5 : 2 என மாற்றப்பட்டது. 9 தலைமையாசிரியர் பணியிடங்களில் 2 பணியிடங்கள் சான்றிதழ் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. அதாவது முதுகலைப்பட்டம் பெற்றவர் ஆசிரியராகவும் பட்டம் மட்டும் பெற்றவர் தலைமையாசிரியராகவும் நியமிக்கப்பட்டனர். இதற்கான புண்ணியத்தை அரசாணை 542, நாள் 29.06.1994 தேடிக்கொண்டது. இதில் ஒரு பத்து வருடம் கழிந்த்து. சான்றிதழ் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் யாரும் இல்லாததால் மீண்டும் விகிதாச்சாரம் 2 : 5 என மாற்றப்பட்டது.
இன்று பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர், படிப்படியாக பதவி உயர்வு மூலம்  பள்ளிக்கல்வி இயக்குனராக கூட ஆக முடியும். ஆனால் முதுகலைப்பட்டம் பெற்றவர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆவதற்குள் அவரது பணிக்காலம் முடிந்து விடும். அரசு நமக்கு வகுத்து தநதிருக்கும் விதிகள் அப்படி.
ஒரு பள்ளியில் முதுகலையாசிரியர் உதவித்தலைமையாசிரியராக இருப்பார். அவரிடம் பணிபுரிந்த பட்டதாரி ஆசிரியர் சில வருடங்கள் கழித்து மாவட்டக்கல்வி அலுவலராகவும், முதன்மைக்கல்வி அலுவலராகவும் பதவி உயர்வு பெற்றிருப்பார். முதுகலையாசிரியர் தொடர்ந்து அதே பணியில் இருப்பார். தன்னிடம் பணியாற்றியவர் வந்தால் எழுந்து நின்று வணக்கம் வைப்பார்.
ஒரு பட்டதாரி ஆசிரியர் மேல்நிலை வகுப்புகளில் பாடம் கற்பிக்காமல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆகலாம். ஆனால் ஒரு முதுகலையாசியர் நேரடியாக நியமனம் பெற்றால் உயர்நிலைப்பள்ளிக்கு தலைமையாசிரியர் ஆக முடியாது.

இன்றுவரை அது தொடர்கிறது.  இது பதவி உயர்வு சார்நத பிரச்சனைகள்.
     சரி ஊதிய விஷயத்திலாவது அரசு நடுநிலையாக நடந்துகொண்டதா என்றால் அதுவும் இல்லை. 1978 ல் நமக்கும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் இருந்த வித்தியாசம் வெறும் ரூபாய்.25 மட்டும். அதாவது அடிப்படை ஊதியத்தில் 3.5 சதம் மட்டுமே வித்தியாசம் . இன்று கல்லூரி ஆசிரியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.21,000. நமது அடிப்படை ஊதியம் ரூ.14100. ஏறத்தாழ 50 சதம் அதிகம். சரி கல்லூரி ஆசிரியரை விடுங்கள். நமது உடன் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியரின் ஊதியம் எவ்வளவு? அடிப்படை ஊதியம் ரூ.13900. முதுகலைப்பட்டத்திற்கான ஊக்க ஊதியத்தை சேர்த்தால்  .ரூ.14740. நம்மை விட ரூ.640 அடிப்படை ஊதியத்தில் அதிகம். அகவிலைப்படியுடன் சேர்த்து 1280ரூபாய் பட்டதாரி ஆசிரியர் கூடுதலாகப் பெறும் நிலை இந்தியாவில் எங்கும் இருக்காது...
இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் நமது முதுகலையாசிரியர் பணித்தொகுதிக்கென்றே உள்ளது. பதவி உயர்வு சார்ந்து பல வழக்குகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது. ஊதிய முரண்பாடுகள் சார்ந்து விரைவில் வழக்கு தொடுக்க உள்ளோம். 
போராடாமல் எதையும் வென்றதில்லை என்பதை மனதில் நிறுத்தி சிறப்பாக செயலாற்றுங்கள். உங்களுக்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் என்றும் துணை நிற்கும்.
தொடர்ந்து பேசுவோம்..
தங்கள் பணி சாரந்த பிரச்சனைகள், அரசாணைகள், தெளிவுரைகளுக்கு தொடர்பு கொள்க,
இரா.சீனிவாசன்,
மாவட்ட செய்தித்தொடர்பாளர்,
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
மின்னஞ்சல்
செல்பேசி 9942618399

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக