புதன், 20 ஆகஸ்ட், 2014

13 ஆயிரம் மக்கள்நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி-உயர் நீதிமன்றம்

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்ட 13 ஆயிரம் மக்கள்நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்கி அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிக்குமாறு கெடு விதித்து உத்தரவிட்டது.

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றிய சுமார் 13 ஆயிரம் மக்கள்நலப் பணியாளர்கள் 2011-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து மக்கள்நலப் பணியாளர் சங்கங்கள் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் நீண்ட சட்டப் போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் முன்பு இதுதொடர்பான வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மக்கள்நலப் பணியாளர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

வேலையற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் 1989-ம் ஆண்டு தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தது. அதன் அடிப்படையில் மக்கள்நலப் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். எனினும் திமுக ஆட்சிக் காலத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களை 1991-ம் ஆண்டு அடுத்து வந்த அரசு பணி நீக்கம் செய்தது. மீண்டும் 1997-ல் அவர்களுக்கு பணி வழங்கப்பட்டது. 2001-ம் ஆண்டில் மீண்டும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 2006-ல் பணியில் சேர்க்கப்பட்டனர். 2011-ம் ஆண்டு திரும்பவும் நீக்கப்பட்டுள்ளனர். அரசின் இந்த நடவடிக்கை சரியல்ல.

இவ்வாறு வில்சன் கூறினார். அவர் மட்டுமின்றி, பல மூத்த வழக்கறிஞர்களும் மக்கள்நலப் பணியாளர்கள் சார்பில் ஆஜராகி தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி, ''மக்கள்நலப் பணியாளர்கள் பணியிடம் என்பது குறிப்பிட்ட காலம் மட்டும் சில பணிகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. அந்தப் பணியிடங்களை ரத்து செய்வது என அரசு முடிவெடுத்த பிறகு, அந்த பணியாளர்களை வேறு அரசுப் பணிகளில் நியமிக்குமாறு கோர முடியாது'' என்று வாதிட்டார்.

வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு:

மக்கள்நலப் பணியாளர்கள் நியமனம் பற்றி பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. உரிய தேர்வுக் குழு மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, காலமுறை ஊதியமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, மக்கள்நலப் பணியாளர்கள் என்ற பெயரிலோ அல்லது மதுவின் தீமைகள் பற்றி மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்காக வேறு ஏதேனும் பெயரிலோ பணியிடங்களை உருவாக்கி அந்த பணியாளர்களை நியமிக்கவேண்டும். இல்லாவிட்டால், அரசுப் பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகள், ஊராட்சி, வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள இடங்களில் மக்கள்நலப் பணியாளர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அவர்களை பணி அமர்த்த வேண்டும். இந்த நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்கி அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

அவ்வாறு பணியில் அமர்த்தப்படாத மக்கள்நலப் பணியாளர்களுக்கு, புதிய பணி நியமனம் வழங்கும் வரை அவர்கள் கடைசியாகப் பெற்ற ஊதியத்தை வரும் நவம்பர் 1-ம் தேதியில் இருந்து வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக